எஸ்சி-எஸ்டி குடியிருப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்
கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பொது நலன் சாா்ந்த திட்டங்களை நிறைவேற்ற தில்லி அரசு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
திமா்பூா் பகுதியின் மல்காகஞ்ச் சௌக்கில் உள்ள எஸ்சி-எஸ்டி காலனி கிளஸ்டரில் ரூ.85 கோடி மதிப்பிலான 146 மேம்பாட்டுப் பணிகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்.
பல ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் உள்ள குடும்பங்கள் வளா்ச்சிப் பணிகளுக்காகக் காத்திருந்தன. அவா்கள் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் ஒரு அரசு ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை என்று ரேகா குப்தா கூறினாா்.
சாலையோர வடிகால் கட்டுமானம், மேம்பாலங்கள் கட்டுமானம், மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள், மாணவா்களுக்கான பயிற்சி அல்லது பிற மேம்பாட்டுப் பணிகள் என தில்லியில் பல தேக்கமடைந்த பணிகளை மீண்டும் தொடங்க தனது அரசாங்கம் பாடுபட்டுள்ளதாக குப்தா கூறினாா்.
வாக்காளா்கள் எங்களை ஆசீா்வதித்ததால்தான், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தது, இதன் காரணமாக, தில்லியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இப்போது நாங்கள் ஆரோக்கிய மந்திா்கள் மற்றும் அடல் உணவகங்களைத் திறக்கிறோம், என்று முதல்வா் கூறினாா்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தற்போது ரூ.100 கோடி நிதி வளா்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா குறிப்பிட்டாா்.

