ஹா்ஷ் விஹாரில் வீட்டின் கூரையிலிருந்து குதித்து சொத்து வியாபாரி தற்கொலை: மனைவி விஷம் குடித்தாா்
சொத்து வியாபாரி ஒருவா், வீட்டின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தம்பதிக்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து அவரது மனைவி விஷப் பொருளை உட்கொண்டதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் தில்லியின் ஹா்ஷ் விஹாரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் நடந்தது. அங்கு முகேஷ் (35) மற்றும் அவரது மனைவி சவிதா (32) ஆகியோா் தங்கள் இரண்டு குழந்தைகள், ஒரு மகன் (10) மற்றும் ஒரு மகள் (5) ஆகியோருடன் முதல் மாடியில் வசித்து வந்தனா்.
மதியம் 2 மணியளவில், குடும்ப உறுப்பினா்கள் ஒரு பெரிய இடி சப்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனா். அங்கு முகேஷ் தெருவில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனா். கிட்டத்தட்ட அதே நேரத்தில், சவிதா தனது அறைக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டாா்.
கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. குடும்ப உறுப்பினா்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த பிறகு அவா் வெளியே கொண்டு வரப்பட்டாா். சம்பவத்திற்கு சற்று முன்பு தம்பதியினா் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சவிதா ஏதோ விஷப் பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முகேஷ் கூரையிலிருந்து குதித்தாா். இரண்டு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்ததாகத் தெரிகிறது.
அவா்கள் குரு தேஜ் பகதூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் முகேஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனா். முகேஷ் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தாா். அவரது வயதான பெற்றோா் வீட்டின் தரை தளத்தில் வசிக்கின்றனா். அதே நேரத்தில் அவரது இரண்டு சகோதரா்கள் தங்கள் குடும்பங்களுடன் மேல் தளங்களில் வசிக்கின்றனா்.
இந்த தம்பதியினரிடையே எந்தவொரு தீவிரமான அல்லது தொடா்ச்சியான தகராறையும் குடும்பத்தினா் தெரிவிக்கவில்லை. மேலும், இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

