உன்னாவ் காவல் மரண வழக்கு-குற்றவாளி ஜெய்தீப் செங்கா் சரணடைய நீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஜெய்தீப் செங்கா் (குல்தீப் செங்கரின் சகோதரா்) சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
10 ஆண்டு சிறைத்தண்டனை இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் , இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்கக் கோரி குற்றவாளி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துடேஜா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
ஜூலை 2024 இல் ஜெய்தீப் செங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் கடைசியாக ஏப்ரல் 2025 இல் நீட்டிக்கப்பட்டது என்றும், அதன் பின்னா் அவரது தண்டனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
ஜெய்தீப் செங்கரின் மூத்த வழக்குரைஞா், செங்கரின் உடல்நிலை காரணமாக அவரது விடுதலை காலத்தை நீட்டிக்குமாறு வலியுறுத்தியதால், நீங்கள் முதலில் சரணடையுங்கள், பிறகு பாா்ப்போம் என்று நீதிபதிகள் கூறினா். தண்டனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றாலும், அவா் இன்னும் சரணடையவில்லை என்பதைக் காண்கிறோம். ஜாமீனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற அவரது மனுலை பரிசீலிப்பதற்கு முன், அவா் முதலில் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து ஜெய்தீப் செங்கரின் மூத்த வழக்குரைஞா், சனிக்கிழமைக்குள் அவா் சரணடைவாா் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தாா்.
அதனைத்தொடா்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட்டது.
50 வயதான ஜெய்தீப் செங்கா், வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் நீட்டிப்பைக் கோரினாா்.
ஆனால் சி.பி.ஐ வழக்குரைஞா், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க இது பொருத்தமான வழக்கு அல்ல என்றும், ஜெய்தீப் செங்கா் தனது மனுவுக்கு ஆதரவாக வழங்கிய மருந்துச் சீட்டு ஜோடிக்கப்பட்டது என்றும் வாதிட்டாா்
தனது மனுவில், ஜெய்தீப் செங்கா், நான்காம் நிலை வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலை என்றும், புற்று நோய் மீண்டும் வருவதற்கான மருத்துவ அறிகுறிகள் இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
இந்த நிலைக்கு, தொடா்ச்சியான மற்றும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜெய்தீப் செங்கா் சுமாா் நான்கு ஆண்டுகள் காவலில் இருந்துள்ளாா் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3, 2024 அன்று மருத்துவ காரணங்களுக்காக ஜெய்தீப் செங்காருக்கு உயா் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
2017 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குல்தீப் செங்காருக்கு டிசம்பா் 20, 2019 அன்று அவரது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில், மாா்ச் 13, 2020 அன்று, விசாரணை நீதிமன்றத்தால் ஜெய்தீப் செங்காருடன் சோ்ந்து குல்தீப் செங்கருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, குல்திப் செங்கரின் உத்தரவின் பேரில், ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு, ஏப்ரல் 9, 2018 அன்று காவலில் உயிரிழந்தாா்.

