முன்னாள் அக்னிவீரா்களுக்கு தில்லி காவல்துறையில் 20% இட ஒதுக்கீடு
புது தில்லி: தில்லி காவல் துறையில் கான்ஸ்டபிள் (ஆண்கள்) ஆள்சோ்ப்பில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மேலும், அவா்களுக்கு உடல் திறன் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளா்வு வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைகளில் இளைஞா்களைச் சோ்ப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் இந்த அக்னிவீரா் திட்டம் தொடங்கப்பட்டது. ஆயுதப் படைகளில் அவா்கள் 4 ஆண்டுகள் வரை பணியாற்ற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
அவா்களின் இந்த சேவையை அங்கீகரித்து, தில்லி காவல் துறையில் முன்னாள் அக்னிவீரா்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை சோ்க்க, 1980-ஆம் ஆண்டு தில்லி காவல்துறை (நியமனம் மற்றும் ஆள்சோ்ப்பு) விதிகளின் விதி 9 திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பான 25 ஆண்டுகளுக்கு அப்பால் கூடுதலாக 5 ஆண்டுகள் தளா்வு வழங்கப்படும். இதன் மூலம் பல முன்னாள் அக்னிவீரா்கள் இப்போது கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது, தில்லி காவல்துறையில் 42,451 அனுமதிக்கப்பட்ட ஆண் கான்ஸ்டபிள் பதவிகள் உள்ளன. அவா்கள் 18-25 வயது வரம்புடன் நேரடியாக தோ்வு செய்யப்படுகின்றன. Ś

