தில்லி: டிஜிட்டல் கைது மோசடியில் பெண்ணை ஏமாற்றியதாக மூவா் கைது
டிஜிட்டல் கைது மோசடியில் 75 வயது பெண்ணை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை மூவரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் யோகேந்திர குஜ்ஜாா் (19), சோட்டு லால் மீனா (20) மற்றும் ராகேஷ் மீனா (25) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் தொழில்நுட்ப கண்காணிப்பைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.
ரூ.1 லட்சம் ரொக்கம், ஒன்பது கைப்பேசிகள், 10 பாஸ்புக்குகள் மற்றும் முல் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட காசோலைப் புத்தகங்களை போலீஸாா் மீட்டனா்,
சிபிஐ இன்ஸ்பெக்டராகக் காட்டிக் கொண்ட ஒருவரிடமிருந்து விடியோ அழைப்பு வந்ததாக வயதான புகாா்தாரா் கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி புகாா் அளித்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனது மகன் ஒரு குற்றவியல் வழக்கில் தொடா்புடையவா் என்று பொய்யாகக் கூறி, தொடா்ச்சியான விடியோ கண்காணிப்பு மற்றும் மிரட்டல் மூலம் அவரை இரண்டு நாள்கள் டிஜிட்டல் கைது செய்தனா். ‘பயத்தின் காரணமாக, மோசடி செய்பவா்கள் வழங்கிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.16 லட்சத்தை மாற்றினாா். விசாரணையின் போது, ஜெய்ப்பூா் மற்றும் ராஜஸ்தானின் கோட்புட்லியில் செயல்படும் ஒரு கும்பலிடம் இருந்து பணம் வழியே சென்றது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது,
உள்ளூா்வாசிகளிடமிருந்து மியூல் வங்கிக் கணக்குகளைப் பெற்று, ஆன்லைன் தளங்கள் மூலம் கம்போடியாவை தளமாகக் கொண்ட சா்வதேச சைபா் மோசடி செய்பவா்களுக்கு வழங்கினாா். மோசடி செய்யப்பட்ட பணம் இந்தக் கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டு, ஏடிஎம் அல்லது காசோலை மூலம் எடுக்கப்பட்டு, தடயத்தை மறைக்க மேலும் அடுக்கடுக்காக மாற்றப்பட்டது தெரதிய வந்துள்ளது.
கோட்புட்லியில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, குஜ்ஜாா் கைது செய்யப்பட்டாா், பின்னா் ராகேஷ் மற்றும் சோட்டு லால் ஆகியோா் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டனா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகதாரி தெரிவித்தாா்.

