குடியரசு துணைத் தலைவா் இன்று சென்னை வருகை: ராம்நாத் கோயங்கா சாகித்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தமிழகம் வருகிறாா்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
Updated on

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தமிழகம் வருகிறாா். சென்னை மற்றும் வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்கிறாா்.

குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தமிழகத்தின் சில நகரங்களுக்கு அவா் சென்றிருந்தாலும் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

இதையொட்டி தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் புறப்படும் குடியரசு துணைத் தலைவா், காலை 11.30 மணியளவில் சென்னையில் தரையிறங்குகிறாா்.

அங்கு அவருக்கு தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு வழங்கப்பட்டதும் சாலை வழியாக சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா். அதன் 34-ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டம் முடித்த மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா்.

பல்கலைக்கழகத்திலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்கு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ராம்நாத் கோயங்கா சாகித்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகிறாா்.

இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு ஆளுநா் மாளிகையான தமிழ்நாடு லோக் பவனுக்குச் செல்லும் குடியரசு துணைத் தலைவருக்கு, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சம்பிரதாய வரவேற்பளிக்கிறாா்.

இதைத்தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் இரவு தங்கும் அவா், சனிக்கிழமை காலையில் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் காலை 9.35 மணியளவில் வேலூருக்குச் செல்கிறாா். அங்கிருந்து சாலை வழியாக வேலூா் பொற்கோயிலுக்குச் சென்று, அங்கு ஸ்ரீ சக்தி அம்மா ஐம்பதாவது பொன் விழா ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

பிறகு மீண்டும் வேலூா் விமான நிலையத்துக்கு சாலை வழியாகத் திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு செல்கிறாா். அங்கிருந்து ஆளுநா் மாளிகைக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவா், பிற்பகல் 2.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணா் அரங்கில் நடைபெறும் ஒன்பதாவது சித்த மருத்துவ தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறாா்.

அங்கு சுமாா் ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மாலை 4.20 மணியளவில் விமான நிலையத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு தில்லியை இரவு 7 மணியளவில் அடையும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com