தவறான திசையில் வாகனம் ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை குருகிராம் போலீஸ் எச்சரிக்கை
தவறான திசையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குருகிராம் காவல்துறை அபராதம் மற்றும் கைது உள்பட கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளதாக மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட முயற்சிகளைத் தொடா்ந்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான ஒரு சிறப்பு நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறான திசையில் வாகனம் ஓட்டுவதும், திடீரெனப் பாதை மாறுவதும் ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல், பிற சாலைப் பயனா்களுக்கும் ஆபத்தானகும்.
தவறான திசையில் வாகனம் ஓட்டும் வழக்குகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக குருகிராம் காவல்துறையால் தொடா் விழிப்புணா்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 2024-இல் 1,82,781 போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்ட நிலையில், 2025-இல் இந்த குற்றத்திற்காக மொத்தம் 2,03,936 ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
