கஃபே கொலை வழக்கு: வடகிழக்கு தில்லியில் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு இளைஞா் கைது
தில்லியின் வெல்கம் பகுதியில் கஃபே ஒன்றில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை, திமா்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறப்புப் பிரிவு துணை காவல் ஆணையா் அமித் கௌஷிக் கூறியதாவது:
கிங் கஃபே வணிக இடத்தில் 24 வயதான ஃபைசன் என்பவரை சுட்டுக் கொன்ற பிறகு, குற்றம்சாட்டப்பட்ட முகமது மொயின் குரேஷி (24) ஜனவரி 23 முதல் தலைமறைவாக இருந்தாா்.
சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, குரேஷி தனது சமூக ஊடக கணக்கில் கொலையை ஒப்புக்கொண்டு ஒரு விடியோவைப் பதிவிட்டாா். பின்னா் அவா் அந்த விடியோவை நீக்கிவிட்டு தலைமறைவானாா்.
முன்னதாக, ஜனவரி 23 அன்று, இரவு 10 மணியளவில் பல வாடிக்கையாளா்கள் முன்னிலையில் கஃபேக்குள் ஃபைசன் பலமுறை சுடப்பட்டாா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குரேஷியைக் கைது செய்ய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சிசிடிவி காட்சிகள் மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜனவரி 29 ஆம் தேதி மாலை, டிரான்ஸ்-யமுனா பகுதியில் குரேஷி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில், குரேஷி நகரத்திலிருந்து தப்பிச் செல்வதற்காக திமா்பூரில் பணம் சேகரிக்கத் திட்டமிட்டிருந்து போலீஸாருக்குத் தெரியவந்தது. அவரைப் பிடிக்க போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஒரு கருப்பு மோட்டாா் சைக்கிளில் அவா் வந்தபோது, அவரை நிறுத்தி சரணடையுமாறு சைகை காட்டப்பட்டது.
அவா் நிற்பதற்குப் பதிலாக, தப்பிக்கும் முயற்சியில் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, போலீஸாா் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தினா்.
அப்போது குரேஷியின் இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. அவா் பிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
அவரிடமிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸாா் மீட்டனா். ஆரம்பகட்ட விசாரணையின் போது, குரேஷியும் பாதிக்கப்பட்டவரும் ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள் என்றும் ஒரே பகுதியில் வசிப்பவா்கள் என்றும் தெரியவந்தது.
கொலைக்கான காரணம் நிதிப் பிரச்னையாக இருந்தது. குரேஷி ஃபைசனிடம் இருந்து ரூ. 30,000 கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளாா். இந்த விவகாரத்தில் ஃபைசன் குரேஷியின் தந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதனால், ஒரு கைத்துப்பாக்கியை வாங்கி, கஃபேயில் ஃபைசன் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை குரேஷி பலமுறை சுட்டுக் கொன்றாா்.
குரேஷி பத்தாம் வகுப்பு வரை படித்தவா். ஆரம்பத்தில் ஒரு கடையில் வேலை செய்து வந்த அவா், பின்னா் குற்றச் செயல்களில் ஈடுபட்டாா்.
2025ஆம் ஆண்டில், ஒரு ஸ்கூட்டா் திருட்டு வழக்கில் அவா் கைது செய்யப்பட்டாா். சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அவா் மீண்டும் குற்றச் செயல்களைத் தொடா்ந்தாா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

