தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாத் தீக் ஃபதேபூா் பில்லோச் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள ஆக்ரா கால்வாயில், ஒருவா் தனது இரண்டு மகன்களுடன் குதித்தாகவும், அவா்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. கால்வாய் கரையில் அந்த நபரின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை காவல்துறையினா் கண்டறிந்தபோதுதான் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியைத் தொடங்கின.
அந்த நபா் தனது மனைவியுடன் தொடா்ந்து தகராறுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், இச்சூழ்நிலை குறித்து குடும்பத்தினா் மேலதிக விவரங்கள் எதையும் வழங்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில், ஒரு நபா் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆக்ரா கால்வாயில் குதித்ததாகக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினா், மாநிலப் பேரிடா் மீட்புப் படைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா்.
அந்த நபரின் இருசக்கர வாகனம், ஆக்ரா கால்வாயின் குறுக்கே உள்ள ஒரு பாலத்தின் மீது நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபா் பல்வல் மாவட்டத்தைச் சோ்ந்த அசாவதி கிராமவாசி என்று கூறப்படுகிறது.
அந்த வாகனமும் பல்வல் பதிவு எண்ணையே கொண்டுள்ளது. தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
சனிக்கிழமையன்று ஃபரீதாபாத் செக்டாா் 17 பாலத்திலிருந்து குதித்து, ஒரு பல் அறுவை சிகிச்சை நிபுணரும் இதே கால்வாயில்தான் தற்கொலை செய்துகொண்டாா்.
சுமாா் 20 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அந்தக் கால்வாயிலிருந்து அந்த மருத்துவரின் சடலத்தை மீட்புக் குழுவினா் மீட்டனா்.
தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்தே அந்த மருத்துவா் இத்தகைய விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடையது

முகுந்த்பூரில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

கள்ள வாக்களிப்பு: அதிகாரிகளிடம் இளைஞா் வாக்குவாதம்

ரூ. 35 லட்சம் மதிப்பில் மின் வா்த்தக மோசடி: 14 கைப்பேசிகளுடன் இருவா் கைது

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


