

பசுமை அரசியல் - சுப்ரபாரதிமணியன்; பக்.84; ரூ.70; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2625 1968.
உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறையும், விழிப்புணர்வும் பெருகி வருகின்றன. பல்வேறுவிதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டு வருகின்றன. உண்மையில் சுற்றுச்சூழலின் எதிரிகள் யார்? யாரிடமிருந்து இந்த உலகைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இந்நூல் அடையாளம் காட்டுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக வந்துள்ள சுப.உதயகுமாரின் "பசுமை அரசியல்' நூல் பற்றிய விமர்சனம், கொ.மா.கோதண்டத்தின் "ஆரண்ய காண்டம்' நாவல் பற்றிய இந்நூலாசிரியரின் பார்வை, எழுத்தாளர் ஆட்டனத்தியின் "அவளா இவள்' நூல் பற்றிய மதிப்புரை, மூன்று சுற்றுச்சூழல் திரைப்படங்கள் பற்றிய அறிமுகம், இந்நூலாசிரியரின் நாவல்களான "புத்துமண்', "சாயத்திரை' ஆகியவற்றைப் பற்றிய பிறருடைய மதிப்புரைகள், சிறுவர் கதைகள், பழங்குடி குரல் என இந்நூல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையங்கொண்டிருக்கிறது. அலையாத்தி காடுகளின் நன்மைகள், சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
இந்தியாவில் தொழில் வளர்ச்சி என்கிற பெயரால் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் சுரண்டப்படுவது, வளர்ச்சியின் பெயரால் சூழல் சார்ந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டிவிட்டது, உலகமயத்திற்கு எதிரான இயக்கங்கள் மிகவும் அவசியமாகிவிட்டதை எல்லாம் இந்நூல் உரத்த குரலில் பேசுகிறது. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தைச் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான போராட்டமாக நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.
உயிரியல் பன்மய வளத்தைக் காப்பாற்ற பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும் (கலாசார வேறுபாடு) காக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து, சுற்றுச்சூழல் பிரச்னை வெறும் சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல; உலகம் தழுவிய அரசியல், பொருளாதாரப் பிரச்னையும் ஆகும் என்பதை நூல் சுட்டிக்காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.