போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருவெம்பாவை - பாடல் 2

அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே

Updated On :25 டிசம்பர் 2017, 11:22 am

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - கரூர் சுவாமிநாதன்

விளக்கம்

விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். தங்களது சுயநலம் கருதி வானவர்கள், இறைவனை வேண்டுவதால், அவர்களின் நிலையை எண்ணி, தங்களை முழுதாக அர்ப்பணிக்காத நிலையை எண்ணி, இறைவன் நாணி கூசுவதாக இங்கே கூறுகின்றார். அதற்கு மாறாக, நாம் முழுதுமாக இறைவனுக்கு ஆட்பட்டு இருப்பதால், தனது திருவடிகளை தந்து அருளுவதற்காக, இறைவன் நமது அருகில் வருகின்றார் என்று பெண்களின் வாய்மொழியாக சொல்லி, நாம் எப்படி இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

பொருள்

நகைகள் அணிந்த பெண்ணே, இரவிலும் பகலிலும். எப்போது நாம் பேசினாலும், எனது அன்பு பெருமானுக்கு உரியது என்று நீ கூறுவாய்; ஆனால் இப்போது நீ படுக்கையின் மீது பாசம் வைத்து இன்னும் உறங்குகின்றாய் போலும் என்று வெளியே இருக்கும் தோழி கேலியாக பேசுகின்றாள். உள்ளிருந்தவாறு அவள் அளிக்கும் பதில். அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே, நமக்கு கேலிப் பேச்சுகள் பேசுவதற்கு உரிய நேரமும் இடமும் இதுவல்ல. வானவர்களின் போலியான அன்பினைக் கண்டு நாணி வெட்கம் அடையும் இறைவன், தனது மலர் போன்ற திருவடிகளை நாம் பற்றிக் கொள்வதற்காக நமக்கு தந்து அருளும் வண்ணம் நம்மை நெருங்கி வரும் தருணத்தில், நமக்குள்ளே ஒருவரை ஒருவர் ஏசும் விளையாட்டுகளை நாம் தடுக்க வேண்டும். நாம் அனைவரும், அனைத்து தேசங்களிலும் இறைவனாக கொண்டாடப் படுபவனும், சிவலோகத்தின் தலைவனும், தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடுபவனும் ஆகிய ஈசனின் அன்பர்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.