Enable Javscript for better performance
குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்

    By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்  |   Published On : 03rd July 2021 06:00 AM  |   Last Updated : 03rd July 2021 12:16 PM  |  அ+அ அ-  |  

    baby_child_girl

    குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்

     

    இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை என்பதனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள்.
     
    அதே போல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணை தள்ளிவைத்துவிட்டு வேறு பெண்ணை; அது அவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம், அந்த பெண்ணை திருமணம் செய்விக்கச் சொல்லுவார்கள். பிள்ளை பெறாத அந்த பெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்கச் செய்வார்கள். அதுவும் ஆணை விட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள்.

    இப்போது கூறப்போவதை நன்றாக மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தைப் பேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைப் பேறு இல்லாத பெண் என்பதே இல்லை. குழந்தைப் பேறு இல்லாத ஆண்தான் உண்டு. இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன் மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அந்த காலத்தில் சில ஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக - பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின் தவறை, ஆணின் உடலில் உள்ள குறையை மறைத்து பெண் மீது, அந்தக் காலத்தில் பல அநீதிகளை பெண்ணுக்கு அளித்தது போல், பெண் மீது பழி சுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்ட வேண்டியதாக உள்ளது. இது போல் செய்தது வேற்று கிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள் தான்.

    இன்றைய தேதியில் அனைவரும், அனைத்து மதத்தினரும் ஆண், பெண் அனைவரும் ஜோதிடம் கற்கிறார்கள் எனும்போது மிகவும் சந்தோஷமாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும் இருக்கிறது. ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலை ஆகும். எனது குருநாதர் கூறுவார், "ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்க வேண்டும்" என்று. இதை இங்கு நானும் கூற கடமைப் பெற்றுள்ளேன்.

    நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர்.

    ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும் கணக்குகளும் தெள்ளத் தெளிவாக உள்ளது.

    அதேப்போல் ஒரு பெண் சாதாரணமாகவே ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தகுதி வாய்ந்தவளா அல்லது மருத்துவ துணையுடன் பெற்றெடுக்கும் தகுதி பெற்றவளா என்பதனையும் ஜோதிடம் தெளிவாக விளக்கிவிடும். குழந்தை பெறமுடியாத நிலை இருவருக்கும் (ஆண்/பெண்)   ஏற்படுமா என்பதனையும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு தத்து பிள்ளை எடுக்க முடியுமா? அல்லது அதற்கும் பாக்கியம் உள்ளதா? இல்லையா என்பதனையும் அறிந்து கொள்ள ஜோதிடத்தில் வழி உள்ளது. ஜோதிட விதிகள் மற்றும் கணக்குகள் உள்ளது.

    அவை அனைத்தையும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். அவற்றை சரியான முறையில் தாங்களாகவே காண முடியாதபோது, தங்களுக்கு அருகில் இருக்கும் இந்த வகையில் பார்த்து சொல்லும் ஜோதிடர் இருப்பின்; அவரின் உதவியை நாடி உண்மையான தகவலை பெறலாம். இதற்கு முதலில் தேவையானவை, சரியான பிறப்பு குறிப்புகள் மட்டுமே. அதாவது ஒரு ஆண் / பெண் பிறந்த சரியான நேரம், தேதி, வருடம், மாதம், ஊர் இவை தெரிந்திருந்தால் மட்டுமே இந்த வேதகால ஜோதிட முறையில் (VEDIC ASTROLOGY ) நாம் சரியான முறையில் கணித்துக் கூற முடியும். இது இல்லாதவர்களுக்கு சற்று கடினம் தான். அதற்கு வேறு வழிகள் உள்ளன. அதனை வேறு கட்டுரையில் காணலாம்.

     ஒரு ஆணின் ஜாதகத்தைக்கொண்டு, அவனுக்கு ஒரு குழந்தையை உற்பத்தி செய்யும் திறன்  இருக்கிறதா இல்லையா என்பதனை அறிய பீஜ ஸ்புடம் எனும் ஒரு ஜோதிட கணக்கு உள்ளது. அதன்படி பார்க்க, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் ஆத்மா / உயிர் காரகரான சூரியனின் பாகை, புத்திர காரகரான குருவின் பாகை மற்றும் சுக்கிலத்திற்கு காரகரான சுக்கிரனின் பாகை,  இவ்வனைத்தையும் கூட்டி அது எந்த ராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அது ஆண் ராசியாகவும், அந்தக் கூட்டி வந்த பாகை நவாம்சத்தில் விழும் ராசியும் ஆண் ராசியாக வந்தால், ஜாதகர் புத்திரப் பேற்றை அளிக்கும் திறனை உள்ளவர் என்றும், அவரால் சாதாரணமாகவே புத்திரப்பேற்றை அளிக்கும் உயிர் சக்தி கொண்டவர் என்றும் அறியலாம்.

    அதுவே கூடி வந்த பாகை, ராசியில் அல்லது நவாம்சத்தில் ஏதேனும் ஒன்றில் பெண் ராசியாக அமைந்து விட்டால், மருத்துவ ரீதியாக மட்டுமே அவரால், புத்திர பேற்றை அளிக்க முடியும் என்றும் கூறலாம். ராசியும் நவாம்சமும் பெண் ராசியாக அமைந்துவிட்டால், அவரால் புத்திர பேற்றினை அளிக்க இயலாது என்றும் கூறலாம். இவருக்கு கடவுள் தான் துணை.

    அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு,  குழந்தையை பெற்றுத் தரும் நிலையில் உள்ளாளா என அறிய ஷேத்திர ஸ்புடம் எனும் ஒரு ஜோதிட கணக்கு உள்ளது. அதனை பார்க்க ஒரு பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் உடல் காரகரான சந்திரனின் பாகை, புத்திர காரகரான குருவின் பாகை மற்றும் பெண்ணுக்கு களத்திர காரகரும், ரத்தம், எலும்பு மஜ்ஜை, வீரிய தன்மை போன்றவற்றின் காரகரான செவ்வாய் இவை அனைத்தையும் கூட்டி வந்த பாகை, எந்த ராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அது பெண் ராசியாகவும், அந்தக் கூட்டி வந்த பாகை விழும் நவாம்சமும் பெண் ராசியாக வந்தால் அந்த பெண் எளிதாக ஒரு குழந்தையை பெற்று தரும் பூரண மகள் ஆகிறார். இவளிடம் கருமுட்டை வளர்ச்சி சரியான நிலையில் உள்ளதாக காண முடிகிறது.

    இதுவே, கூட்டி வந்த பாகை ஒன்று ஆண் ராசியாகவும் மற்றொன்று பெண் ராசியாகவும் வந்தால், புத்திர உற்பத்திக்கு உடனடி தீர்வு இல்லை எனவும் தோஷ நிவர்த்தி மற்றும் மருத்துவ ரீதியாகவும் தான் , அந்த பெண், குழந்தையை பெற்றுத் தர இயலும் என கூறமுடியும்.

    மேற்கண்ட தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், முன்கூட்டியே ஒரு ஜாதகத்தை ஆய்ந்து அதனை சரியாக கண்டுகொண்டால்  அதற்கான தீர்வை அடுத்த கட்ட நடவடிக்கைகளான மருத்துவ உதவி பெற்று குழந்தை பாக்கியத்தை பெற முடியும். இதனை திருமணத்தின் போதே பொருத்தம் பார்க்கும் நிலையிலேயே இந்த விவரங்களை அறிந்து அதற்கேற்ப மருத்துவ உதவிகளை பெற்று அருமையான குழந்தை பாக்கியத்தை பெற இயலும்.  தம்பதியினரிடையே இந்தக் காரணத்திற்காக ஏற்படும்  பிரிவினையை தடுக்கலாம். ஏன் எனில் பொதுவாக நாம் பொருத்தம் பார்க்கின்ற போது இருவீட்டாரின் பொருளாதார நிலை மற்றும் இருவரின் அழகு, படிப்பு, வேலை, சம்பளம் போன்றவற்றை மட்டுமே பார்த்து முடிவெடுக்கிறோம். இத்துடன் புத்திர பேற்றிற்கான தகுதியையும் முன்னரே அறிந்து கொள்ளும் போது தம்பதியினரிடையே ஆன பிணைப்பு நீண்ட காலத்திற்கு அருமையாக தொடரும்.

    பொதுவாகவே குழந்தைக்கான தகவல்களை லக்கினத்திற்கு 5 ஆம் பாவத்தை வைத்து புத்திர பாக்கியத்தை அறிந்து கொண்டாலும் ஒருவரின் உண்மை நிலைகளை, அவரின் உடல் கூறு பற்றி, உடல் தரும் உபாதைகளை பற்றி சரியாக அறிந்து கொள்வதற்கு மேற்சொன்ன ஜோதிட கணக்குகளை ஆய்ந்து பலன் பெற வேண்டும்.

    "ஜோதிட ரத்னா"   தையூர். சி.வே. லோகநாதன்.
    தொடபுக்கு : 98407 17857


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp