தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா?

தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும்.
தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா?

தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் ஆம்! நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். அதற்கு பல விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும், தோஷ சாம்யம் எனும் தோஷ அளவீடுகளை அறிந்து, முன்னரே அறிந்துகொள்ள முடியும். இதனை நமது ஜோதிட பிதாமகர்கள், மஹா கவி காளிதாசரும் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

பிரிவினைக்கான காரணங்கள்: -

1. விஷ கன்னிகா தோஷம் 

இது பலவிதம்... அதாவது, செவ்வாய்- சனி சேர்க்கை, செவ்வாய்-சனிக்கு இடையில் எந்த கிரகமும் இல்லாதிருப்பது. திருமண யோகத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரு கிரக அமைப்பாகும். 
இதனால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் நிம்மதி பாதிக்கும். மறுமணம் ஏற்படும் சூழல் உருவாகும். இந்த சூழலில் மற்றவர்கள், இவர்களின் வாழ்வில் இணைந்து விடுகிறார்கள். 

2. தம்பதியருள் ஏற்படும் அகந்தை

பொதுவாக லக்கினாதிபதி தான் ஒருவருக்கு அகந்தையைத் தருபவர். இப்படிப்பட்ட நிலையில் அகந்தை அதிகமாகும்போது  தம்பதியருள் பிரிவினை ஏற்படுகிறது. ஒருவரின் லக்கின அதிபதி மற்றவர் ஜாதகத்தில் பலவீனமானால், அவரை இவர் மதிக்க மாட்டார். அதேபோல் ஒருவரின் ஏழாம் அதிபதி அடுத்தவர் ஜாதகத்தில் பலவீனமானால், இவர் அவரை மதிக்கமாட்டார். இதனை, சர்வாஷ்டக வர்க்க பரல்களும் எடுத்துரைக்கும். அதாவது லக்கினத்தில் பெற்ற பரல்களின் எண்ணிக்கை 7 ஆம் இடத்தின் பரல்களை விட அதிகமாக இருப்பின் ஜாதகர் தமது வாழ்க்கை துணைவரை அடக்கி ஆள நினைப்பார். அதே சமயம் ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்து பரல்கள் லக்கின பரல்களைவிட அதிகமாக இருப்பின், வாழ்க்கை துணைவரின் கட்டுப்பாட்டில் ஜாதகர் இருப்பார்.

இது ஆண் - பெண் இருபாலருக்கும் அதாவது கணவன், மனைவி ஜாதகத்திற்கும் பொருந்தும். இதனை இன்னமும் விரிவாக காணும் போது, மனைவியின் ஜாதகத்தின் லக்கின அதிபதி கணவரின் ஜாதகத்தில் நீசமாக இருப்பின், மனைவி கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாலும், கணவர் மனைவியைத் துளியும் மதிப்பதில்லை என்பதை காண முடிகிறது. 

அதேபோல் கணவரின் லக்கினாதிபதி மனைவியின் ஜாதகத்தில், நீச்சமாகும் போது கணவர் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தாலும், மனைவி, கணவரை எவ்வளவு தரக்குறைவாக நடத்த வேண்டுமோ அவ்வளவு தரக்குறைவாக நடத்துகிறார்.

உதாரணத்திற்கு, பொருத்தம் பார்க்கும் இருவரும் (ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில்) தேவ கணம் என்று தெரிகிறது. அருமையாக தானே பொருந்துகிறது என சேர்த்துவைத்தால், பின்னர் இருவருக்கும் பிரிவினை ஏற்படுகிறது.

காரணம் பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ அல்லது இருவரின் ஜாதகத்திலோ செவ்வாய் , ராகு இணைவு உள்ளது. ஆணாக இருப்பின் கர்வம் மிகுந்தும், முரட்டு குணமும் இருக்க வாய்ப்பு அதே சமயம் பெண்ணிற்கு பிடிவாத குணம் நிறைய இருக்கும்.  இது இந்த தம்பதியரைப் பிரித்துவைக்கும். அதனால் தான் வெறும் நட்சத்திர பொருத்தம் தவிர கிரக பொருத்தமும் காண்பது சிறந்தது.
 
3. தம்பதியரில் ஏற்படும் பொறுமை இழப்பு

முன்பெல்லாம் தம்பதியருள் பிரச்னை வராது. காரணம் கூட்டு குடும்பம். அப்படியே குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் தம்பதியர் வேலை நிமித்தமாகச் சென்றாலும்  அவர்களுக்குள் பிரச்னை வரும்போது, மனைவி தமது பிறந்த வீட்டுக்கு தகவல் சொல்ல லெட்டர், போஸ்ட் கார்டு போடுவார். அது அந்த பிரச்னைகளை தாங்கி பிறந்த வீடு செல்ல 3 முதல 5 நாட்களோ அதற்கு மேலாகவோ ஆகும். அதனை கண்ட தாய், தந்தையர் வீட்டு வேலைகளை முடித்து புறப்பட்டு தம் மகளை காண ஒரு வாரம் கழித்து வரும் போது அங்கு காண்பது கனவா நனவா என இருக்கும். இங்கு தம்பதியினரின் கோபம் போய் சந்தோஷமாய் இருப்பது கண்டு வெறுமனே சென்று விடுவார் பெற்றோர். 

ஆனால் இன்றைய நிலை என்ன?  வீட்டில் தம்பதியரிடையே வரும் பிரச்னைகளை ஆன்லைனில் உடனே அனைவருக்கும் ஒளிபரப்பி விடுவதால், அது விபரீத நிலைக்கு தள்ளப்படுகிறது. பொறுமை என்பது தம்பதியர் இருவருக்கும் இழந்துவிடுவதைக் காணமுடிகிறது. அதனால், வெறும் நட்சத்திர பொருத்தம் போதாதென்று, கிரக பொருத்தம் மற்ற நிலைகளையும் ஆய்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் ஜோதிடர்கள். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சிலர், பொருத்தம் பார்த்துச் சொல்வது வேடிக்கையாகவும், இளம் தம்பதியருள் நடக்கும் மனப் போராட்டங்களும், அதன் மூலம் ஏற்படும் விவாகரத்து, வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு போன்றவை நடைபெறுவதைக் காண முடிகிறது. 

4.  திருமணத்திற்குப் பின் பொருளாதார நிலை உயர்வதும், தாழ்வதும் 

உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் திருமணத்திற்கு பின்னர் தாழ்ந்த நிலையை அடைவதும், தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் திருமணத்திற்கு பின்னர் உயருவதையும் நாம் காண்கிறோம். அதனை பானை பிடிக்கும் பாக்கியம் என்று பெண் சார்ந்தே கூறுவது வழக்கம். அப்படியானால், ஆணின் பங்கு ஏதும் இல்லையா என்ன? அதனை முழுவதுமாக ஆய்ந்து பின்னர் தம்பதிகளை சேர்த்து வைப்பதுவே ஒரு சிறந்த ஜோதிடரின் கடமையாகும். ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கை என்பதனை மறந்துவிடக்கூடாது. 

பொதுவாகவே பொருத்தம் பார்க்க வருபவர்கள் / பெற்றோர்கள் தமது பையனுக்கு / மகளுக்கு பொருந்தும் வரனை ஆய்வு செய்ய சொல்வதும், அப்படி பொருந்தும் வரன்களால், அவர்களின் பெண் / பையனின் வாழ்வில் திருமணத்திற்குப் பின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதே ஆகும். இதில் முக்கியமானது என்னவென்றால், திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பொருளாதார நிலை உயரும். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு பொருளாதார வாழ்க்கை நிச்சயம் உயரவும் செய்யும், அதற்கு தக்க செலவும் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில், சனி , சுக்கிரன் சேர்க்கை, பார்வை இருப்பவர்களும், குரு, சுக்கிரன், சனி சேர்க்கை / பார்வை இருப்பவர்களுக்கும் வயது ஏற ஏற பொருளாதார நிலை உயரவே செய்யும், 

நிச்சயம் குறையாது எனலாம். அதனை கண்டறிவதே திருமண பொருத்தத்தின் ஒரு அங்கமாகும்... 

தோஷ சாம்யம் காணும் முறை...

இதனை பெரும்பாலும் இங்கிருக்கும் ஜோதிடர்கள் காண்பதில்லை என்றே சொல்லலாம்... வட இந்தியாவில் ,பெரும் பணக்காரர்களுக்கு அங்குள்ள ஜோதிடர்கள் இதனை கண்டே 
திருமணத்தை செய்விக்கின்றனர்... மேலும் இதனை காண்பதற்கு அதிக கட்டணம் வாங்குகின்றனர். ஆனால், இங்குள்ள நிலை அதனைக் கண்டு சொல்வதற்கு அதிக அளவில் ஜோதிடர்களும் இல்லை எனலாம். 

தம்பதியினர் இருவரின் ஜாதகத்திலும், 1, 2, 4, 7, 8, 12 ஆம் இடங்களில் உள்ள கிரகங்களின் நிலையை கண்டறிவதே தோஷ சாம்யதின் நிலை ஆகும். 1 ஆம் இடம் ஜாதகரின் நிலையையும், 2 ஆம் இடம் குடும்பத்தில் அவர்களின் பங்கு பற்றியும், வாக்கு நிலையையும், 4ஆம் இடம் தம்பதியர் பெறும் சுகத்தை பற்றியும், 7ஆம் இடம் தம்பதியரிடையே ஆன புரிதல் மற்றும் பெறும் அன்யோன்யத்தை பற்றியும், 8 ஆம் இடம் மறைவிடமான மர்ம ஸ்தானத்தைப் பற்றியும் அதனால் பெறும் மகிழ்வு நிலை பற்றியும், 12 ஆம் இடம் தம்பதியரிடையே நெருக்கம் மற்றும் சுகமான நித்திரை பற்றியும் சொல்லும். கிரக நிலைகள் முற்றிலுமாக எடுத்து சொல்வது தான் தோஷ சாம்யம் ஆகும். இது பொதுவாக ஆணுக்கு தோஷ அளவீடு அதிகமாகவும் பெண்ணுக்கு ஆணைப் போல் சமமாகவும் அல்லது ஆணைவிட பாதி வரை இருப்பது சரியாகும். அதேசமயம் பெண்ணுக்கு தோஷ அளவீடு அதிகமாகும் போதும், மிகக் குறைவாக ஆணைவிட இருந்தாலும் பொருத்தம் செய்விக்கக்கூடாது. அதனால் தம்பதியரிடையேயான பிரிவினை நிச்சயம் ஏற்படும் என்பதனை சுட்டிக்காட்டுவதே இந்த தோஷ சாம்ய ஜோதிட ஆய்வு ஆகும். 

தொடர்புக்கு : 98407 17857  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com