சமீபத்தில் கேரளத்தில் நிகழ்ந்த பேரிடர் வெள்ளம் போல் தமிழகத்தையும் பாதிக்குமா? என்ற கேள்விக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
வெள்ளம் புரட்டிப்போட்ட கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை - வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் 10 நாட்களாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 350-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதை அடுத்து வெள்ளம் சற்றே வடிந்து வருகின்றது. கேரள மாநிலம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் அனைத்துத் தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சிலர் கேரளாவைப் போல் தமிழகமும் பேரிடரைச் சந்திக்கும், ஓரிரு மாதத்தில் தமிழகமும் மிதக்கும், மிகப் பெரிய அழிவைச் சந்திக்கும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பி பயமுறுத்தி வருவது தான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
இவர்கள் செய்யும் பொய், புரட்டுகளுக்கு எல்லாம் பஞ்சாங்கத்தை வேறு துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். அதில் இல்லாததை எல்லாம் இவர்களே சேர்த்து மக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இது போதாதென்று, வரும் வாட்ஸ் அப் செய்திகளை எல்லாம் உண்மையா, பொய்யா என ஆராயாமல் பொதுமக்களும் அப்படியே ஃபார்வேர்ட் செய்துவிட்டு, குற்றத்துக்கு நாமும் உடந்தையாக இருந்து விடுகிறோம்.
எனவே உண்மை நிலை என்ன? என்பது குறித்து நமது ஜோதிடர் பெருங்குளம் ராமக்கிருஷ்ணன் கூறியிருப்பதை உங்களுக்கு இங்கே பகிர்ந்துள்ளோம்.
அதாவது,
ஜோதிட ரீதியாக தற்போதைய சூழ்நிலையில் கிரகங்கள் எதுவும் தமிழகத்திற்கு எதிராக இல்லை. மழைப்பொழிவு இருக்குமே தவிர பயப்படக்கூடிய அளவில் இருக்காது. தமிழகத்துக்கு எந்த அழிவும் நேராது. மக்கள் தேவையின்றி வதந்திகளைப் பரப்ப தேவையில்லை என்று அவர் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.
எனவே, தமிழக மக்களே மழை, வெள்ளம், அழிவு என்பது போன்ற செய்திகளைப் படித்து பயப்பட வேண்டாம். முதலில் அதுபோன்ற செய்திகளை ஃபார்வேர்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் தினமணி சார்பில் விடுக்கும் அன்பு வேண்டுகோள்.