கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மகோற்சவ திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கேரளத்தில் உள்ள ஐயப்பனின் 5 படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். தனித்தீவு போன்று அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சி புரிவதாக ஐதீகம். கேரளத்தில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் மகோற்சவ திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18, 19, 20ஆம் தேதிகளில் உற்சவவாரி திருவிழாவும், 21ஆம் தேதி அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. 5, 6, 7ஆம் நாள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 11.45 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி கோயிலை சுற்றி உள்ள ரதவீதிகளில் செண்டை மேளம் முழங்கிட பக்தி கோஷத்துடன் வலம் வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் தேர் நிலையை வந்தடைந்தது.
சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை கட்டி இழுக்கும் இத்தேரோட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை (டிச. 26) ஆறாட்டு விழா நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









