சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உத்ஸவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உத்ஸவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Published on

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயிலில் சித் சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து, செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.என்.எஸ்.சந்திரசேகர தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார். 

இந்த உற்ஸவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. வருகிற 20-ம் தேதி (புதன்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 

21-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

22-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது. உற்ஸவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் ஜெ.ந.நடேஸ்வர தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com