ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைக் கோயில் யாத்திரை மோசமான வானிலை காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமர்நாத் புனித பயணம் மேற்கொள்ளும் குகைக் கோயில் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாயில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை வழிபடப் பயணம் மேற்கொண்டனர்.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள அமர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்துக்கு இயற்கையாகவே பனி லிங்கம் தோன்றும். அதனை தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவதுண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை மற்றும் குகைக் கோயில் தரிசனம் மொத்தம் 60 நாள்களுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான யாத்திரையை மேற்கொள்ள சுமார் 2 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பஹல்காம், பால்டால் ஆகிய இருவேறு வழித்தடங்களின் மூலமாக அமர்நாத் யாத்ரீகர்கள், பனி லிங்கத்தைத் தரிசிக்கச் செல்ல 6,429 பேர் அடங்கிய இரு குழுக்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன. யாத்திரையை ஒட்டி அந்த இரு வழித்தடங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 592 பெண்கள் உள்பட 3,500 பேர் அடங்கிய இரண்டாவது குழு அமர்நாத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. அதற்கு ஒரு நாள் முன்னதாக 3,000 பேர் அடங்கிய முதல் குழு யாத்திரையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை சற்று தாமதமானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு பிறகு மீண்டும் யாத்திரை தொடங்கியது.
ஆனால், யாத்திரை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கடும் மழை, நிலச்சரிவு காரணமாக யாத்திரை இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம், பால்டால் ஆகிய இருவேறு வழித்தடங்களில் யாத்தீரிகர்கள் முகாமிட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி மோசமான வானிலை சரியாகும் வரை குகைக் கோயில் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.