
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலுக்கென தனி வரலாறு உண்டு. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற யுத்த தேவதையை திருப்திபடுத்தும் பொருட்டு 32 சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய, அர்ச்சுனனுக்கும், நாகக் கன்னிக்கும் பிறந்த அரவானை களப்பலி கொடுத்ததாக வரலாறு. இந்தக் கோயிலில் அரவான் கூத்தாண்டவராக காட்சியளிக்கிறார்.
இந்தக் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சென்னை, தில்லி, புணே உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொண்டனர். தங்களை மணப்பெண்களைப் போல அலங்கரித்துக் கொண்ட திருநங்கைகள், பூசாரிகள் கைகளால் தாலி கட்டிக் கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பாகங்களிலிருந்து அரவாண் திருவுருவம் உருவாக்கப்பட்டு, இன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் திருநங்கைகள் கூடி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர், தேர் நத்தம் எனப்படும் பந்தலடிக்கு வந்தடைந்து, அங்கு அரவான் சுவாமிக்கு களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்களை பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.