மணிக்கணக்கில் தொலைபேசியில் கடலைப்போட ஆசையா? உங்கள் ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறார் எனப் பாருங்கள்!

இன்று ஸ்மார்போனின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஹலோ என்ற வார்த்தையை உச்சரிக்காத ஆள்..
மணிக்கணக்கில் தொலைபேசியில் கடலைப்போட ஆசையா? உங்கள் ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறார் எனப் பாருங்கள்!

இன்று ஸ்மார்போனின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஹலோ என்ற வார்த்தையை உச்சரிக்காத ஆள் உலகத்தில் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். தற்போது பிறந்த குழந்தைகள் கூட மொபைல் போனுடன் தான் பிறக்கின்றனர். அன்பைச் சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த, அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாற்றங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வு காண முடியும் என்று உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21-ம் தேதி உலக ஹலோ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக 1973-ம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. ஜோதிடத்தில் ஹலோவுக்கான கிரகம் எது தெரியுமா? ஜோதிடத்தில் நட்புறவுக்கும் தகவல் தொடர்புக்கும் காரக கிரகம் புதன் தான்.

கால் செண்டரும், டெலி மார்கெட்டிங்கும்

பல நாடுகளில் வாடிக்கையாளர் சேவையை கருத்தில் கொண்டு கால் செண்டர் எனும் பிரிவை வைத்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை தீர்ப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய சேவைகளை அளிப்பதும் இவர்களின் முக்கிய வேலையாகும். ஒரு பொருளை விற்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி புரிய (விற்பனைக்குப் பிந்திய சேவை), புதியதாக அதை வாங்க நினைப்பவர்களுக்கு அந்தப் பொருளை பற்றிச் சொல்ல (விற்பனைக்கு முந்திய சேவை), பொருட்களை விற்க, இப்படிப் பலதரப்பட்ட சேவைகளை இன்று கால் செண்டர்கள் மூலம் செய்து வருகிறார்கள்.

மேலும் தற்காலங்களில் தொலைப்பேசியில் பேசி பொருட்களை விற்கும் டெலிமார்கெட்டிங்கும் அதிகரித்துள்ளது. இன்சூரன்ஸ், லோன் மற்றும் வங்கி சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள், ரியல் எஸ்டேட்டுகள் என அனைத்துத் துறைகளிலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. 

கடலைப் போடுபவர்கள்

கடலை வறுத்தல் அல்லது கடலை போடுதல் என்னும் சொலவடை கடந்த சில ஆண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஒரு வாக்கியம். இதைக்குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இக்கடலை எல்லார்க்கும் மிகப்பிடித்தமானதும் சுவையானதுமானது. இது இளைஞர், மத்திய வயதினர், வயதானவர், திருமணம் ஆகாத விடலைப் பருவத்தினர், திருமணமானவர் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானது. கடலை என்பது எந்தவித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்குத் தோன்றியதை இஷ்டம் போல் அள்ளிவிடுவதே கடலை ஆகும். இந்தக் கடலை போடுபவர்களுக்கு ஆண் பெண் எனும் பாகுபாடு இல்லை என்றாலும் ஆணும் பெண்ணும் கடலைப்போடுவதே பிரபலமாக இருக்கிறது. பல கடலைகள் காதலாக முடிவதையும் காண முடியும்.  

வாய் ஜாலத்தால் பிழைப்பவர்களுக்கான கிரக அமைப்பு

வாக்கில் சிறந்தவருக்கு வாத்தியார் வேலை என்பார்கள். பேச்சு திறமைக்கு புதனே காரகர் ஆவார். பேச்சு திறமையால் வாழ்க்கை நடத்துபவர் அனைவர் ஜாதகத்திலும் புதன் பலம் வாய்ந்து இருப்பதைக் காண முடியும். கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, ஜோதிடம், தொலைப்பேசி, புலனாய்வுத்துறை, தரகு, மகாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வசீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம் ஆகியவற்றின் காரகனான புதன் தான் நட்பை வளர்க்கவும் காரக கிரகம் ஆகிறது. காதலிக்கவும் கடலை போடவும் கூட காரகர் புதன் தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

அதேபோல் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் புதனுக்குரிய வீடாகி அதுவே தகவல் தொடர்பைக் குறிக்கும் பாவமாகிறது. எனவே ஒருவரின் தகவல் தொடர்பைக் குறிக்கும் மூன்றாம் வீடு, கன்னி, மிதுனம், புதனிருக்கும் வீடு ஆகியவற்றைக் கொண்டு ஒருவரின் நட்பையும் தகவல் தொடர்பையும் தீர்மானிக்க முடியும். மேலும் காமம், புத்திசாலித்தனம், கல்வி, கவர்ச்சி, ரகசியத்தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல் ஆகியவற்றை குறிக்குமிடமாகவும் அமைகிறது.

மூன்றாம் பாவம்

இந்த மூன்றாம் பாவத்தை ஜெயஸ்தானம், வீரியஸ்தானம், சகோதிரஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த மூன்றாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியைச் சகோதர ஸ்தானாதிபதி, ஜெயாதிபதி, (அ) மூன்றாமதிபதி என்று அழைக்கப்படுவார். மூன்றாம் பாவம் எழுத்தினைக் குறிக்கும். எனவே எல்லாவித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும், ஒப்பந்தங்களையும் மூன்றாம் பாவமே குறிக்கும். மூன்றாம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றைகளையும், சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று போன்றவற்றையும் குறிக்கும். 

ஆரம்ப கல்வி கற்பதற்கேற்ற மனச்சார்பு, அறிவு, குறுகிய பயணம், சாலை, சைக்கிள், பேருந்து, கடிதம், கணிதம், தபால் நிலையம், தொலைப்பேசி, கைப்பேசி, தொலைக்காட்சி, ரேடியோ செய்திகள், எதையும் சுருக்குதல், அடையாள சின்னங்கள், சான்றிதழ்கள், காசோலைகள், உலகில் உள்ள அனைத்துப் பதிவுகள், மத்தியஸ்தம், தூது செல்லுதல், பத்திரிகைகள், விளம்பரம், கையெழுத்து, நூலகம், அச்சு, குத்தகை, வதந்திகள், கோள் சொல்லுதல், மனக்குழப்பம், புத்தி பேதலித்தல், ஏற்கனவே இருப்பவைகளுடன் பலவற்றைப் புதிதாக சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் புதிய பரிணாமங்களை உருவாக்குதல் போன்றவைகள் மூன்றாம் பாவத்தின் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

ஏழாம் பாவத்தை ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உரிய பாவமாக நம் முன்னோர்கள் கூறினார்கள். கணவன், மனைவி உறவினை தவிர்த்து மற்ற உறவு முறைகளான அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா, மாமி, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, குழந்தை போன்ற உறவுகள் ஏழாம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்களைக் குறிப்பதால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல், வாடிக்கையாளரையும், ஜாதகருக்கு உள்ள பொதுஜன தொடர்பினையும், ஜாதகருக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தையும், ஜாதகர் மற்றவரிடம் சகஜமாக பழகுபவரா அல்லது பொருளாதார ரீதியில் பழகுபவரா என்பதையும், மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்றப்படுவாரா என்பதையும் 7-ம் பாவம் மூலம் ஒருவரின் ஜாதகத்தில் அறியலாம். 

ஜாதகரின் திருமண வாழ்க்கை, வாழ்க்கைத்துணை பற்றின விபரங்கள், பொதுமக்களின் ஆதரவு, பொதுக்கூட்டங்கள், திருடனைப் பற்றின விபரங்கள், எதிர்பாலின ஸ்பரிச சுக பரிமாற்றங்கள், மற்றவருடனான நீண்ட நாள் பழக்க வழக்கங்கள், வியாபாரத்தில் பங்குதாரர்கள், ஜாதகரின் வெளிப்படையான குணம், எதிலும் மற்றவரை இணைத்துக் கொள்ளுதல், இரண்டாவது குழந்தை, மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், பிறரைச் சார்ந்திருத்தல், போன்றவை ஏழாம் பாவத்தின் காரகங்களாகும். 

பதினொராம் பாவம்

ஒருவருடைய விருப்பம், அபிலாசைகள், குறிக்கோள், வெற்றிகள், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி (வைட்டமின்கள்), ஜாதகரின் நெருங்கிய நண்பர்கள், ஜாதகரின் நலம் விரும்பிகள், ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள், சேமிக்கும் பழக்க வழக்கங்கள், முயற்சிகள் சித்தியாதல், ஆசைகள் நிறைவேறிய பின் கிடைக்கும் திருப்தி, நீடித்த நட்பு, ஒருமித்த கருத்து உடையவர்களின் குழு, சங்கம், கூட்டம், மாநாடு, தந்தை வழி சித்தப்பா, உச்ச நிலை கல்வி, முழு அறிவைப் பெறுதல், ஒரு துறையில் முழுமையாகப் பயின்று டாக்டர் பட்டம் பெறுதல், புத்திக் கூர்மை, பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், வியாதி குணமடைதல், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல் போன்றவையும் 11ம் பாவத்தின் காரகங்களாகும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் புதன், மூன்றாமிடம், ஏழாமிடம் மற்றும் பதினோறாமிடம் இம்மூன்றும் நல்ல நிலையில் தொடர்பு பெற்று அதன் அதிபதிகள் நட்பாகவும் அமைந்துவிட்டால் அவர்கள் அனைவரிடமும் சிறந்த நட்புடன் விளங்குவர். அதிலும் லக்னம் ஜன வசிய ராசியான துலாம் மற்றும் ரிஷபமாக இருந்துவிட்டால் அனைவரும் தானே வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கும் ராகு-கேது

காற்றிலே பரவக்கூடிய விஷயங்களை அதிவேகமாகப் பரப்புவதில் ராகு-கேதுக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவருடைய வாக்கு ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். என்றாலும், வாக்கு ஸ்தானத்தில் ராகு நின்றால் திருமண வயது வரை அதிகம் பேசுபவர்களாகவும் கேது நின்றால் திருமண வயதை கடந்தபின் அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல ராகுவும் கேதுவும் மூன்றாம் பாவத்தில் நிற்கப்பெற்றவர்கள் மிகச்சிறந்த தகவல் தொடர்பாளர்களாக இருப்பார்கள்.

காற்று ராசிகள்

ஒருவருடைய ஜாதகத்தில் மேஷம்/சிம்மம்/தனுசு ஆகிய லக்னங்கள் அமைந்து  காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை மூன்றாம் பாவமாக அமைந்து அங்கு புதன் ராகு சாரத்தில் அதாவது திருவாதிரை/சுவாதி/சதயம் ஆகிய நக்ஷத்திர பாதங்களில் அமைய அவர்கள் தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் காற்று ராசிகளில் சந்திரன் நின்று புதன் ராகு சேர்க்கை பெற தகவல் தொடர்பில் புகழ் பெறுவார்கள்.

தகவல் தொடர்பில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு யாருக்கு?

1. காலபுருஷ லக்னமான மேஷ லக்னமாகி மூன்றாம் பாவத்தில் புதன் ஆட்சி பெற்று நிற்பது மற்றும் சந்திரனின் வீடாகிய கடக லக்னமாகி மூன்றாம் வீட்டில் புதன் உச்சம் பெற்று நிற்பது.

2. ஜென வசிய ராசிகளான ரிஷபமும் துலாமும் லக்னமாகி வாக்கு ஸ்தானத்தில் புதன் நிற்பது.

3. எந்த லக்னமாக இருந்தாலும் மூன்றாம் பாவத்திலோ அல்லது மிதுனத்திலோ புதன் நிற்பது.

4. காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் மூன்றாம் பாவமாக அமைந்து லக்னத்திலோ அல்லது மூன்றாம் பாவத்திலோ புதன் நிற்பது.

5. காற்று ராசி அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி காற்று ராசிகளில் சேர்க்கை பெற்று நிற்பது அல்லது பரிவர்த்தனை பெறுவது.

6. புதன் ராகு சாரத்திலும் ராகு புதன் சாரத்திலும் சார பரிவர்த்தனை பெறுவது.

7. புதன் ஆத்மகாரகனாக அமையப் பெறுவது மற்றும் பஞ்ச மகா புருஷ யோகங்களில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று விளங்குவது.

8. லக்னம் கன்னியாகி அதில் புதன் உச்சம் பெற்று பத்தாம் வீடும் புதனின் வீடாக அமைவது, பத்தாமிடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று நிற்பது, சனியும் புதனும் சேர்க்கை பெற்று மிதுனத்தில் நிற்பது ஆகியவை தகவல் தொடர்பில் தொழில் அமையும் அமைப்பாகும்.

தற்போது கோசாரத்தில் மிதுன ராசியை நோக்கி ராகு வரசில மாதங்களே உள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் ட்யூப்ளெக்ஸ் எனும் தொழில் நுட்பம் கால் செண்டர் தொழில் நடத்துபவர்கள் மற்றும் கால் செண்டர்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளதைக் காணமுடிகிறது. வரும் 2019 மார்ச் மாதத்தில் ஏற்படவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சிக்கு பின் தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களில் ஒரு மாற்றத்தைக் காணமுடியும். இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பது அவரவர் சுய ஜாதகத்தைப் பொருத்து அமையும்.

நட்பு வளர்க்கும் பாண்டவ தூத பெருமாள்

உங்களுக்கு அக்கம் பக்கத்தார், உடன் பணிபுரிபவர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் பகைமை ஏற்பட்டு பிரச்னை ஏற்படுகிறதா? நீங்கள் செல்ல வேண்டிய திருக்கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. புதனின் அதிதேவதையான விஷ்ணு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், (ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோயில்) காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு காட்சி யளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.

துரியோதனிடம் கிருஷ்ணர் தூது

மஹாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூதாட்டத்தில் கெளரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார். அவர்களுக்கு ஒரு வீடாவது தர வேண்டுமென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்கத் தூது சென்றார். எனவே தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு மத்யஸ்தம், முகவான்மை ஆகிய பணிகளை மேற்கொள்பவர்கள் காஞ்சி பாண்டவ தூத பெருமாளை வணங்கிவருவது சிறப்பாகும்.

மேலும் கால் செண்டர், டெலி மார்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்க சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை புதன் கிழமை புதன் ஹோரை காலங்களில் வணங்கி வருவதும் சிறந்த பயனளிக்கும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com