சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகரஜோதியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
முன்னதாக பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த 12-ஆம் தேதி புறப்பட்ட திருவாபரணப் பெட்டி திங்கள்கிழமை மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது.
அதிலிருந்த நகைகள் சுவாமி ஐயப்பனுக்கு சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகரஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது சபரிமலை கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷங்கள் எழுப்பினர். மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலை கோயில் வளாகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளும் மேற்கொண்டிருந்தனர்.
மகரஜோதியை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








