ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து மலைப் பகுதி வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்களின் கீழ் உள்ளது. சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்த காலங்களில் பக்தர்களுக்கு கோயிலில் குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளைக் காரணம் காட்டி, கடந்த 3 மாதங்களாக அங்குள்ள அனைத்து அன்னதான மடங்களையும் மூட அறநிலையத்துறை உத்தரவிட்டது. சித்திரை அமாவாசையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மலை ஏறும் வழியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீரை நிரப்ப அறநிலையத் துறையும், வனத்துறையும் ஏற்பாடுகள் செய்யவில்லை எனவும், மலைக் கோயில் அருகே உள்ள தனியார் உணவு விடுதிகளில் ஒரு இட்லி ரூ.20, தோசை ரூ.100, தண்ணீர் பாட்டில் ரூ.50 என விற்கப்படுவதாகவும், பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியதன் காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.