சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

2020 விருச்சிக ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் - ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்தது. 
சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்
சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

2020 விருச்சிக ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வினைகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடுபவர். நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு  என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன்  மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.

எப்படி இருக்கப்போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:

கிரகநிலை:

உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் தைரிய ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார். 

ராகு பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திலும் - கேது பகவான் ராசியிலும் இருக்கிறார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள்.

யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். 

கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இது நாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். 

குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டுவது நன்மை தரும். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள். 

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். 

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். 

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். 

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள்  வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அனுஷம்:

இந்த சனிப் பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

கேட்டை:

இந்த சனிப் பெயர்ச்சியில் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

பரிகாரம்:

தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதன் மூலம் எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். 

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீம் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 

அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com