தை அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு? இன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இன்று தை அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள்.
தை அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு? இன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இன்று தை அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள்.

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.

வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்கவேண்டிய முக்கியமான நாள். 

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும் சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இதனைப் புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியவை..

முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்துக் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்குத் தானமாக வழங்கலாம்.

முன்னோர்களுக்கு பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர் மனத்திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள். தெய்வத்திடம் பெறக்கூடிய ஆசீர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்லமுறையில் வாழவைக்கும். 

வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

இன்றைய தினத்தில் செய்யக்கூடாதவை..

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையிலிருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.

தை அமாவாசைகளில் வழிபாடு

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் லட்ச தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதியம்மன் ஆலயமே பிரகாச ஜோதியாகக் காணப்படும். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள்.

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று, அக்னி தீர்த்தத்துக்கு திருவீதியுலா வருவார். புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர்.

அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com