ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படவுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம், பெரியகோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோயில் மூலஸ்தானத்தில் தொடங்கும். டிசம்பர் 23-ம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது.
பகல் பத்து உற்சவத்தின் 10வது நாளான ஜனவரி 1-ம் தேதி மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பார். ஜனவரி 2-ம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார்.
அதைத்தொடர்ந்து, ஜன.8-ல் திருக்கைத்தல சேவையும், ஜன.9-ல் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜன.11-ல் தீர்த்தவாரியும், ஜன.12-ல் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் இன்றி வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.