உலகத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்துக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழு முதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மிக பலத்தையும் அளிக்கவல்லது.
சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டுப்படுகிறது.
பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடு. பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம். விநாயகர் திருவுருவத்தை வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால்(களிமண்ணால்) உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம். புனர்பூஜை கழித்துத் திரும்பவும் அந்த பிம்பத்தைக் கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.
அன்றைய தினம் 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நலம் பல அடையலாம்.
விநாயகருக்கு உகந்த 21 இலைகளும், அதன் பலன்களும்..
1. முல்லை இலை - அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை - இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்குப் பாதுகாப்புக் கிட்டும்.
12. மருதம் இலை - மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்