பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான்.
கிழமைகளில் சுக்வாரம் என்றழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கோயில்களில் மட்டுமின்றி வீடுகள் தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு கூழ் வார்த்தல் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு போடுதல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.
ஆடி மாதம் முழுவதும் கடவுளை சிரத்தையுடன் நாம் வழிபட வேண்டும் என்பதற்காக தான் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் நடத்துவதில்லை.
ஆடி வெள்ளியில் வழிபாடு செய்வது திருமண பாக்கியம், குழந்தைப் பேறு, பிரிந்தவர்கள் ஒன்று சேருதல், கணவரின் ஆயுள் அதிகரிக்க என சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும்.
தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் வாராஹி நவராத்திரி இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுவது "மா விளக்கு". இந்த நல்ல நாளில் அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து நமக்கு வேண்டும் வரங்களை அருவாள் என்பது ஐதீகம்.
பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல் செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர்.
துர்க்கை, மாரி, காளி போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாடு செய்வது சிறப்பு. இதனால் ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
இதையும் வாசிக்கலாம்: சுள்ளி பொறுக்கச் சென்ற பழங்குடியினப் பெண் லட்சாதிபதி ஆன கதை