திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டுக்கடங்காமல் கூட்டம் நிரம்பி வழிவதால் 36 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த செப்.27 தொடங்கி அக்.5-ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது.
பொதுவாக, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் நிலையில், புரட்டாசி மாதத்தில் வழக்கத்தை விடக் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் நாளை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பியுள்ளதால், இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று வருகின்றனர்.
சுவாமி தரிசனத்திற்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி உள்ளிட்ட அனைத்தும் வசதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.