செங்கல்பட்டு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பிரமோற்சவம் விழாவின் ஏழாம் நாள் செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 63வது திவ்யதேசமாக திகழ்கிறது. இக்கோயிலில் நிலமங்கை தாயாராக வீற்றிருந்து தம்மிடம் வரும் பக்தர்களுக்கு நிலப்பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பல்லவ நரசிம்மன், மகேந்திரவர்மன், ஹரிசேகர மகாராஜா, சிம்ம விஷ்ணு போன்ற பல்லவ மன்னர்களால் கடற்கரையொட்டி 7 கோயில்களை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
கடல் முன்னோக்கி வந்ததால், 6 கோயில்கள் கடலில் மூழ்கியது. இதில், மீதம் இருந்த ஒரே ஒரு கோயில் தான் கடற்கரை கோயிலாகும். இக்கோயிலை, பாதுகாக்கவும், அதில் இருந்த தலசயன பெருமாள் கடலில் அடித்து சென்று விடுவாரோ என்ற அச்சத்தில் கடந்த 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர பேரரசு மன்னர்களில் மாமன்னரான பராங்குச மன்னன் மாமல்லபுரத்தின் மைய பகுதியான அர்ஜூனன் தபசு சிற்பத்துக்கு அருகே கடற்கரை கோயிலில் தலசயன பெருமாள் உள்ளது போன்று, இங்கு கோயில் கட்டி கடு சர்க்கரை படிமம், செம்பு கம்பி, தேங்காய் நாறு, சுக்கான், மண் சாந்துபோன்ற கலவைகளால் மூலவரை உருவாக்கி, அதற்கு தலசயன பெருமாள் என பெயரிட்டனர்.
இக்கோயிலில், தலசயன பெருமாள் ஒரு கையை தலையில் வைத்தும், மற்றொரு கை பக்தர்களை வா என்றும் அழைக்கும் வகையிலும், மற்ற இரண்டு கைகளை பாதாளம் மற்றும் ஆகாய லோகத்தை காண்பித்தவாறும் புன்டரீக மகரிஷியுடன் காட்சி தருகிறார்.
இக்கோயிலில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை மாத பிரமோற்சவ விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து இவ்விழா வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது.
21ம்தேதி சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது. ஏழாம் நாள் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.தேர்த் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பாக அலங்காரம் நடைபெற்று, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெரியும் வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் மாட விதிகளை சுற்றி ஆன்மீக அன்பர்கள் அன்னதானம், நீர் மோர், தண்ணீர் குளிர்பானம் என வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தலசயன பெருமாள் கோயில் திருக்குளமான புண்டரீக புஷ்கரணி திரு குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெறயுள்ளது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில்செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.