கோயில்: ஸ்ரீ வைரவன் கோவில்,
தலம்: வைரவன்பட்டி.
சிவகங்கை மாவட்டம்.
மூலவர்: வளரொளி நாதர்
அம்பாள்: வடிவுடையம்மன்
தீர்த்தம்: வைரவ தீர்த்தம்
சிறப்புமிகு வைரவன் சுவாமி திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ.
தொலைவிலும் அமைந்துள்ளது.
இது ஒரு வைரவர் தலம் என்பதோடு, நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் முக்கியமான கோவிலாகவும் திகழ்கிறது.
சுவாமி சன்னிதிக்கும் அம்பாள் சன்னிதிக்கும் இடையில் தனி சன்னதியில் வலதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன் வைரவர் காட்சித்தருகிறார். இவரே இங்கு பிரதான மூர்த்தியாவார்.
கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர் ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கையில் சீதை நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை ஹனுமன் ராமனிடம் கூறியதால் அவருக்கு
நன்றி சொல்லும் விதத்தில் இரு கைகூப்பி வணங்கியபடி ராமர் காட்சிதருகிறார் என்பதாக ஐதீகம்.
அம்மன் சன்னிதிக்கு பின்புறம் இரண்டு பல்லிகள் இருக்கின்றன. இதனை தொட்டு வணங்கினால் தோஷங்கள் விலகும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியில் யாகம் வளர்த்து வைரவருக்கு தங்கக் கவசம் சாற்றி வெகு சிறப்பாக வழிபடுகின்றனர்.
இது மிகவும் பழமையான கோவில். இங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும், ஓவியங்களும் கலைநயம் மிக்கவை. கோயில் நிர்வாகத்தார் இன்றுவரை சிறந்த முறையில் அனைத்து சிற்பங்களையும் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.