விஷாகா குழு பின்னணியும் விதிகளும்...

விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார்.
விஷாகா குழு பின்னணியும் விதிகளும்...

விஷாகா குழு (Vishaka Committee)

ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் காவல் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது ஒரு அதிர்ச்சி செய்தி தான். இப்பொழுது, இந்தப் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில்,  விஷாகா குழு பற்றித் தெரிந்து கொள்வோம்.

விஷாகா குழு பின்னணி

விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவர் கும்ஹார்  (குயவர் - potter) என்ற சாதியை சேர்ந்தவர். இவர் ஒரு சமூக சேவகி. அதனால் ராஜஸ்தான் மாநில அரசால் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.

1992 ஆம் வருடம் குஜ்ஜார் சாதியில் (Gujjar)  9 வயது குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்த பன்வாரி அக்கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கு தக்க ஆலோசனை கூறினார். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

உயர்சாதியினரின் ஆதிக்க சக்தியை அறிந்த பன்வாரி  “9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்கிறார்கள், அதைத் தடுப்பது என் பணி என போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசிடம், கிராமத்தினர் இது  சாதாரண விழா, திருமணம் ஏதுமில்லை என நாடகம் நடத்தி அனுப்பிவிட்டனர்.

22, செப்டம்பர், 1992 அன்று அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த 5 ஆண்கள் பன்வாரியை அடித்ததுடன், பன்வாரியை அவர் கணவர் முன்னிலையில் பாலியில் பலாத்காரம் செய்தனர். அப்போது அவருக்கு வயது 26. பன்வாரியும், அவரது கணவரும் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினர். இவ்வழக்கு நடந்த 1995 வருடம் வரை 5 முறை நீதிபதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், குற்றவாளிகளை பின்வரும்  காரணங்களை மேற்கோள் காட்டி நீதிபதி விடுவித்தார்:

  • ஒரு கிராமத் தலைவர் கற்பழிக்க முடியாது
  • பல்வேறு சாதியைச் சேர்ந்த ஆண்கள் கும்பலாக கற்பழிப்பில் பங்கேற்க முடியாது.
  • 60-70 வயது முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது.
  • உறவினரின் முன்னால் ஒரு மனிதன் கற்பழிப்பதில்லை; போரி வழக்கில் (Bhori’s case) குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் ஒரே குடும்பத்தினர் - மாமா மற்றும் மருமகன்.
  • உயர் ஜாதி உறுப்பினர், தூய்மைக்கான காரணங்கள் காரணமாக குறைந்த சாதி பெண்ணை கற்பழிக்க முடியாது.

அதன்பின், ஜெய்ப்பூர் மற்றும் டில்லியைச் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் சார்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ”விஷாகா” கூட்டுத் தளத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்தனர். பணியிடங்களில் பெண்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும்,  பெண்களின் பாதுகாப்புக்கு முதலாளிகள் பொறுப்பேற்க வேண்டும், குறிப்பாக பெண்களின் கவலை மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

விஷாகா மற்றும் பலர் Vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் 13, ஆகஸ்ட்,1997 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில வழிமுறைகளை வகுத்தது. (AIR 1997 SUPREME COURT 3011)

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள்...

1. இந்த விஷாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
2. கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 
3. ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும். 

எவை எவை பாலியல் தொல்லைகள்? 

  • பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது, 
  • அவரை பாலியலுக்கு அழைப்பது, 
  • அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, 
  • பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, 
  • ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013 (the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) இயற்றப்பட்டு அதன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அரசுத் துறை, தனியார்த் துறை மட்டுமில்லாமல், பாதிக்கப்படும்  தினக்கூலி பெண் பணியாளர்களும்  புகார் தருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், ‛விஷாகா' குழு இதுவரை அமைக்கப்படவில்லை என்பது வேதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com