ரகசிய கேமரா - பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகள்!

வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர்.
ரகசிய கேமரா - பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகள்!

கடந்த 2014 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு 26.6.2014 ல் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில், கீழ்க்காணும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசு முடிவு செய்தது,

வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். மேற்கண்ட அமைப்புகள் பொதுவாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் G.O. (Ms) N0.10, Social Welfare and Nutritious Meal Programme (SW5) Department dt.21.02.15

என்ற அரசாணையின் மூலம் ‘தமிழ்நாடு விடுதிகள், பெண்கள் குழந்தைகள் காப்பகங்கள் (ஒழுங்குபடுத்துதல்சட்டம், 2014 இன் படி கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

உள்கட்டமைப்பு வசதிகள்...

1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி / காப்பகம் / அமைவிடம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விடுதி / காப்பகம் / அமைவிடம் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

தனித்தனிக் கட்டிடங்கள்...

2. ஆண் / பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எனத் தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும்.

தனித்தனி அறைகள்...

3. ஆண்/ பெண் குழந்தைகள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகளுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் மாணவர் மற்றும் மாணவியர் ஒரே கட்டடத்தில் தங்க நேரிடின், தனித்தனியான அறைகளில் தங்க வைக்கப்படவேண்டும்.

விடுதி காப்பாளர்...

4. வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி / காப்பகம் / அமைவிடங்களில் விடுதிக் காப்பாளர் / பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் பொறுப்பாளராக இருக்க வேண்டும்.

பாதுகாவலர்கள்...

6. விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பணியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

7. ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

8. 50 க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் / தங்குமிடங்களின் வாயில்களில் சுழலும் கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்படவேண்டும்.

24 மணி நேர பாதுகாப்பு...

9. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ மாற்று ஏற்பாடு செய்யாமலோ பணிக்கு வராமல் இருக்கக் கூடாது. இவர்கள் பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நுழைவாயின் அருகே...

10. மேற்கண்ட அமைவிடங்களில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி குழந்தைகள், வளரிளம் பெண்கள், பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.

11. அமைவிடங்கள் நான்குபுற சுற்றுச் சுவர்களுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.

தினசரி வருகைப் பதிவேடு...

12. விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்கு திரும்பும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.

பார்வையாளர்கள்...

13. தங்கியிருப்பவர்களைச் சந்திக்க பார்வையாளர்களாக அவர்களுடைய பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

14. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.

15. வெளி நபர்கள் கட்டடத்தினுள் நுழைவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.

16. இளம் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளர் கண்காணிப்பிற்குட்பட்டு நடைபெற வேண்டும்.

விடுமுறை...

17. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோரை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் / பாதுகாப்பாளரிடம் அந்த விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.

18. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர் பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

19. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.

20. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு பார்வையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.

அடையாள அட்டை...

21. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

22. பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பபட வேண்டும்.

23. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்.

நன்னடத்தைச் சான்றிதழ்...

24. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களாக முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் முந்தைய நன்னடத்தை பற்றிய சான்றிதழ்களை உள்ளூர் காவல் துறையிடமிருந்து பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஆரோக்கியம்...

25. தொற்று நோய் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் மருத்துவ ஆவணங்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்றளிக்கப்பட வேண்டும். அவர்களின் மன நிலை மற்றும் மன உறுதியினை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஊதியம்...

26. அரசு அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஊதியம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

27. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விடுதி / இல்லம் / அமைவிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையின் பங்கு...

28. பதிவு செய்யப்பட்ட விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்கள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையேனும் ரோந்துப் பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

29. மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்தில் இத்தகைய விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு...

30. மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் வருவாய், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன், சமூக நலம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய அனைத்து மாவட்ட நிர்வாக அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்ககைளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

31. விடுதிகள் / காப்பகங்கள் / அமைவிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாவலர் நியமனத்தில் உதவிடும் வகையில், மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்களது பட்டியலை காவல் துறை தயாரிக்க வேண்டும்.

ஆய்வு...

32. அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட இல்லங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை குழந்தைகள் நலக் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

33. விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களில் தங்கியிருப்பவர்கள் உடல் ரீதியாகவோ மற்றும் உள ரீதியாகவோ பாதிக்கப்படுவதை தடுப்பது கண்காணிப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்ட வேண்டும்.

34. பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலையினை கருத்திற் கொண்டு, மாவட்ட ஆட்சியரால் இவ்வில்லங்கள் வகைப்படுத்தப்பட்டு தேவையான கண்காணிப்பு இயக்கமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.

35. இத்தகைய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக பதிவு செய்வதை உறுதி செய்திட உள்ளுர் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவசர உதவி எண்...

36. தற்போதுள்ள குழந்தைகள் உதவி எண் 1098 - ஐ பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம்பரம் செய்ய வேண்டும்.

37. பாதுகாவலர் மற்றும் விடுதிக் காப்பாளரின் தொலைபேசி எண்ணுடன் கூடிய இவ்வமைப்புகளின் பட்டியல் பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட வலைதளத்தில் ஏற்றப்பட வேண்டும். இது, தகுந்த பதிவு செய்யப்படாமல் இயங்கும் அமைப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தும்.

திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் தங்கும் விடுதி நடத்திவருகிறார். சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்தபோது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் சில வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் (HIDDEN CAMERA DETECTOR)செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து குளியலறை, தங்கும் அறைகளில் சோதித்த போது குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்டி கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பாக தங்குவது குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி.

1. உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி - காப்பகத்தினை தேவையான உள்க ட்ட மைப்பு வசதிகளுடன் அமைக்க வேண்டும்.

2. இருபால் தங்குமிடமாக இருப்பின் ஆண் - பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டு ம். தவிர்க்க இயலாத நிலையில் தனித்தனி அறைகளில தங்க வைக்க வேண்டும்

3. பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்

4. 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக்காப்பாளரும். 24 மணி நேரமும் பாதுகாவலர்களும் நியமிக்கப்படவேண்டும்.

5. ஒன்றுக்கு மேற்ப ட்ட வாயில்கள் இருப்பின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

6. 50க்கு மேற்பட்டோட் இருக்கும் இல்லங்களின் வாயில்களில Closed Circuit Television Camera, Digital Video Recorder பொருத்தப்பட வேண்டும்.

7. விடுதிக் காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

8. விடுதியில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி விடுதிக் கட்டங்களுக்குள்அனுமதிக்க கூடாது.

9. அமைவிடம் நான்கு புற சுற்றுச்சுவர்களுடனும். உள் மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய விடுதிகள் அமைத்து விடுதியில் தங்கியிருப்பவர்கள் வெளிச்செல்லும் நேரம், உள்ளே வரும் நேரம்ஆகியவற்றை தினசரி வருகைப்பதிவேட்டில் பதிய வேண்டும்.

10. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கண்காணிப்பாளர் முன்னிலையில் பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை வரவேற்பறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். இளம் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை காணவரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிபாக விடுதிக்காப்பாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

11. சிறு வயது குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.

12. பார்வையாளர் புத்தகம் ஒன்றை விடுதிக்காப்பாளர் பராமரித்து . பார்வையாளர் பெயர், முகவரி. உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான காரணம் ஆகியவற்றை பதிந்து பார்வையாளர் ஒப்பம் பெற்று . விடுதிப் பணியாளரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.

13. விடுதிக்காப்பாளர். பாதுகாவலர். பெற்றோர் ஆகியொருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

14. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் தொலைபெசி எண் மற்றும் முகவரியை காப்பகத்தின் முன்வ hயிலில் வைக்க வேண்டும்.

15. விடுதிக்காப்பாளர் மற்று ம் பாதுகாவலர்களின் முந்தைய நன்னடைத்தைச் சான்றினை உள்ளூர் காவல்துறையில் பெற்றும். அவர்களின் உடல்நலம்குறித்து அரசு மருத்துவமனையில் சான்று பெற்றும். 55 வயதிற்கு ட்பட்ட நபர்களை பணியில் நியமித்து . மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

எனவே சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறார் மற்றும் பெண்கள் விடுதிகளை நடத்துபவர்கள் மேற்சொன்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும்; தீயணைப்பு, காவல்துறை. மாநகராட்சி. சுகாதாரத்துறை. வருவாய்த்து றை உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம்பெற்று இறுதியாக மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் பதிவுசெய்து அதற்கான அத்தாட்சியினைப் பெற்ற பின்னரேவிடுதிகளை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மேற்கண்ட உரிமங்களைப் பெறறு மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து கொள்ள 31.12.2018 வரை கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்ட தன் அடிப்படையில் 31.12.2018 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. மேற்படி விடுதிகளில். குறிப்பாக பெண்கள் தங்கும் விடுதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும்.

பெண்கள்தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்களை கண்ட றிய Hidden Camera detector APP செயலிகளைப் போன்ற பல செயலிகள் உள்ளன. அவற்றில் உள்ளபடி தங்களது மொபைலில் பொருத்தி கண்காணித்து புகார்கள் அளிக்கலாம்.

31.12.2018 க்குப் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் விடுதிகள் குறித்தும் பிற விடுதிகளில் ஏதெனும் குறைகள் இருந்தால் அது குறித்தும்இதற்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 9444841072 என்ற தொலைபெசி எண்ணிற்கு Whatsapp முலம் பகைபபடங்களுடன் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னைமாவட்ட த்தில் இதுவரை 8 விடுதிகளில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் 100 விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளது. மேற்படி விண்ணப்பங்களை சென்னை ஆட்சியர்அலுவலகம். 8வது மாழயில்உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பதிவு செய்வதற்கென விண்ணப்பத்தினை இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1.1.2019 முதல் மாவட்ட ஆட்சியரிடம்பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு விடுதியிலும் பெண்களை - குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேதுவாக மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை அந்தந்த விடுதிகள்அறிவிப்பு பலகையில்ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

31.12.2018க்குள் பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல். முகவரியுடன் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அதனையும்; பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு ஆணைப்படி விடுதி நடத்துவதற்கான பதிவுச் சான்று மற்றும் உரிமத்தையும் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம்பெற்றும் விடுதியை செவ்வனெ நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெறாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10-12-2018 அன்று தொடங்கி வைக்கிறார்.

பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த சேவை, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா தகவல் சேவை மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.

குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை தொடர்பான உளவியல் ரீதியான உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


மாவட்ட ஆட்சியர் சென்னை மாவட்டம்
ஒம்/- அ. சண்முகசுந்தரம்.

- ஆணைப்படி-

Whatsapp புகார் எண் 9444841072

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com