தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....

வரம்புரையாக ஏற்பளிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் நிறுத்தப்படாத வேட்பாளரின் வேட்புமனு, தொகுதியின் வாக்காளர்களாகவுள்ள பத்து முன்மொழிபவர்களால் முன்மொழியப்பட்டாலன்றி, தொகுதியில் தேர்தலுக்கு உரியவாறு நியமிக
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி வேட்பாளர்களின் வேட்பு மனு(Nomination of Candidates)

பிரிவு 30. வேட்பு, மனுக்கள் தாக்கலுக்கான தேதிகள் குறித்தல் (Appointment of dates for nominations, etc.)

தொகுதி ஒன்றிற்கான ஓர் உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டவுடன், தேர்தல் ஆணையமானது, அரசிதழில் அறிவிக்கை வாயிலாக,

  1. முதலில் குறிப்பிடப்பெற்ற அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதிக்கு பின்னர் 7-வது நாள் அல்லது அந்த நாள் பொது விடுமுறை தினமாக இருப்பின், அதனை அடுத்து தொடர்ந்து வரும் பொது விடுமுறை தினம் அல்லாத தினத்தை வேட்பு மனுக்கள் தாக்கலுக்கான இறுதி நாளாக நியமனம் செய்திடும்;

  2. வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாளை, உடன் பின்னரான நாளை அல்லது அந்த நாள் பொது விடுமுறை தினமாக இருப்பின், அதனை அடுத்து தொடர்ந்து வரும் பொது விடுமுறை தினத்தை வேட்பு மனுக்கள் கூர்ந்தாய்வு தேதியாக நியமனம் செய்திடும்;

  3. வேட்பு மனுக்கள் கூர்ந்தாய்வுக்கான தேதிக்குப் பின்னர் இரண்டாவது நாள் அல்லது அந்த நாள் பொது விடுமுறை தினமாக இருப்பின், அதனை அடுத்து தொடர்ந்து வரும் பொது விடுமுறை தினம் அல்லாத தினத்தை வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளாக நியமனம் செய்திடும்.

  4. தேர்தல் நடைபெற வேண்டிய தேதி அல்லது தேதிகள், அந்த தேதியானது வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான இறுதி தேதிக்குப் பின்னர் 14-வது நாளுக்கு முந்தைய தேதியாக இருத்தலாகாது; மற்றும்

  5. தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய தேதியினை குறித்திடும்.

பிரிவு 31. தேர்தலுக்கான பொது அறிவிப்பு (Public notice of election)

பிரிவு 30-இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டவுடன், தேர்தல் பொறுப்பு அலுவலர், வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை அத்தகைய தேர்தலுக்கு தாக்கல் செய்திட கோரியும் மற்றும் அத்தகைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திடுவதற்கான இடத்தை குறித்துரைத்தும் வகுத்தமைக்கப்பட்ட அத்தகைய பாங்கினில் தேர்தல் குறித்த பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிடுதல் வேண்டும்.

பிரிவு 32. தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்தல் (Nomination of candidates for election)

இடம் ஒன்றினை நிரப்புவதற்கான தேர்தலுக்கு எந்தவொரு நபரும், அரசமைப்பு அல்லது இச்சட்டத்தின் காப்புரைகளின் கீழ் அல்லது ஒன்றியத்து ஆட்சிப் பரப்பிடங்கள் அரசு சட்டத்தின் காப்புரைகளின் கீழ் நேர்விற்கேற்ப, அவர் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருப்பின், வேட்பாளராக நியமிக்கப்பட தகுதியுடையவராவார்.

பிரிவு 33. வேட்பு மனுவைத் தாக்கல் செய்தல் மற்றும் செல்திறன் வேட்பு மனுக்கான வேண்டுறுத்தல்கள் (Presentation of nomination paper and requirement for a valid nomination.)

  1. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பிரிவு 30 கூறு (a) கீழ் தேர்தல் அறிவிப்பில் குறிப்பிடப் பெற்ற நாள்களில் ஒவ்வொரு வேட்பாளரும், நேரில் அல்லது முன்மொழிபவர் வாயிலாக முன்பகல் 11 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடையில் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் இதன் பொருட்டு பிரிவு 31-இன் கீழ் அளிக்கப்பட்ட அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட இடத்தில் வகுத்தமைக்கப்பட்ட படிவத்தில் நிறைவு செய்த வேட்பு மனு ஒன்றினை வேட்பாளராலும் தொகுதியில் வாக்காளராகவுள்ள முன்மொழிபவர் ஒருவராலும் ஒப்பமிடப்பெற்று அளிக்கப் பெற வேண்டும்

வரம்புரையாக ஏற்பளிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் நிறுத்தப்படாத வேட்பாளரின் வேட்புமனு, தொகுதியின் வாக்காளர்களாகவுள்ள பத்து முன்மொழிபவர்களால் முன்மொழியப்பட்டாலன்றி, தொகுதியில் தேர்தலுக்கு உரியவாறு நியமிக்கப்பட்டதாக கருதப்படமாட்டாது.

மேலும் வரம்புரையாக, தேர்தலுக்கான வேட்பு மனுவைப் பொது விடுமுறையாக உள்ளதொரு நாளில் தேர்தல்பொறுப்பு அலுவலரிடம் அளிக்கக் கூடாது.

இன்னும் வரம்புரையாக, உள்ளாட்சி அமைப்புகள் தொகுதியின், பட்டதாரிகள் தொகுதியின், பட்டதாரிகள் தொகுதியின் அல்லது ஆசிரியர்கள் தொகுதியின் நேர்வில் ”தொகுதியின் ஓர் வாக்காளர் முன்மொழிபவராக’ எனும் சுட்டுகை தொகுதியின் வாக்காளர்களில் 10% அல்லது அத்தகைய வாக்காளர்கள் 10 பேர் எது குறைவோ, முன்மொழிபவர்களாக பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

  1. தொகுதி ஒன்றில் ஏதேனும் இடம் பட்டியல்சாதி அல்லது பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டதாக இருக்கிறவிடத்து, ஒரு வேட்பாளராக உள்ள சாதி அல்லது பழங்குடி இனம், பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் என அறிவிப்பு செய்யப்பட்டது எனவும் தொடர்புடைய அப்பகுதியின் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் என்பதை குறிப்பிட்டு விளம்புகை இருந்தாலன்றி, அந்த இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, தகுதியுடையவராகக் கருதப்படமாட்டார்.

  1. வேட்பாளராக உள்ள நபரொருவர், பிரிவு 9.இல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் பதவி வகித்து பணியறவு (dismissed) செய்யப்பட்டிருக்கிறவிடத்து, மற்றும் பணியறவு செய்யப்பட்டதிலிருந்து 5 வருட காலம் கடக்காத போது, அவரது வேட்பு மனுவுடன் தேர்தல் ஆணையத்தினால் வகுத்தமைக்கப்பட்ட பணியறவு செய்யப்படவில்லை என சான்றிதழ் இணைக்கப்பட்டாலன்றி, அத்தகைய நபர் உரியவாறு வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டதாக கருதப்படாது.

  1. வேட்பு மனுவொன்று தாக்கல் செய்யப் பெற்ற நிலையில், வேட்பாளரின் பெயர் மற்றும் வேட்பாளட் பட்டியல் எண், வேட்பு மனுவில் இடம் பெற்றிருக்கும் அவரின் முன்மொழிபவர் பெயர் ஆகியன வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கொப்ப உள்ளனவா என்பது குறித்து தேர்தல் பொறுப்பு அலுவலர் மனநிறைவு கொள்ள வேண்டும்.

வரம்புரையாக, தாக்கல் செய்யப்பெற்ற மனுவில் மேற்கூறிய பெயர்கள் அல்லது எண்கள் தொடர்பில் பொருள் தவறு அல்லது விவரத்தில் தவறு அல்லது எழுத்து அச்சுப்பிழை ஏதேனும் இருப்பின் அல்லது வேட்பாளரின் பெயர் சரியற்ற முறையில் அல்லது அவரின் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று சரியாக இல்லையென அல்லது மக்கள் அறிந்த அவரின் பெயரிலிருந்து வேறுபட்டிருக்கிறவிடத்து, அதனை சரிசெய்ய அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள தொடர்புடைய பதிவுகளுக்கொப்பவும் தேவைப்படுகின்றவிடத்தும் எழுத்து அல்லது அச்சுப்பிழையை மேற்கூறிய பதிவுகளைத் தேர்தல் அலுவலர் சரி செய்யலாம் அல்லது புறக்கணிக்கலாம்.

  1. வேட்பாளர் ஒருவர் வேறு தொகுதியின் வாக்காளராக இருக்கிறவிடத்து, அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகல் ஒன்று அல்லது தொடர்புடைய அதன் பகுதி அல்லது அத்தகைய பட்டியலின் தொடர்புடைய அதன் பகுதி அல்லது அத்தகைய பட்டியலின் தொடர்பான பதிவுகளின் சான்றிட்ட நகல் ஒன்று, வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்தாலன்றி, கூர்ந்தாய்வு செய்யும் நேரத்தில் தேர்தல் பொறுப்பு அலுவரின் முன் முன்னிடப்படுதல் (filed) வேண்டும்.

  1. இவ்விதியில் அடங்கியுள்ளது எதுவும் வேட்பாளர் ஒருவர் ஏதேனுமொரு தேர்தல் ஒன்றுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்வதை தடை செய்யாது.

வரம்புரையாக, ஏதேனும் ஒரு தேர்தலில், அதே தொகுதியில் நான்கு வேட்பு மனுக்களுக்கு மேற்பட்டு வேட்பாளரோ அவர் சார்பாகவோ தாக்கல் செய்யக் கூடாது அல்லது தேர்தல் பொறுப்பு அலுவலரால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் கூடாது.

  1. இந்தச் சட்டத்தின் உட்பிரிவு (6) இல் அல்லது வேறு ஏதேனும் வகையங்களில் அடங்கியுள்ளது எது அவ்வாறு இருப்பினும், பின்வரும் நேர்வுகளில் நபரொருவர் வேட்பாளராக நியமனம் செய்யப்படமாட்டார்.

  1. மக்களைவைக்கான பொதுத் தேர்தல் நேர்வில் (அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடந்தாலும் அல்லது நடக்காவிடினும்) ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலிருந்து;

  1. மாநிலம் ஒன்றின் சட்டமன்ற பொதுத்தேர்தல் நேர்வில்(அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடந்தாலும் அல்லது நடக்காவிடினும்) ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலிருந்து;

  2. மாநிலத்தின் சட்டமன்ற மேலவைக்கான ஈராண்டு முறைத்தேர்தல் நேர்வில், மாநிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மேலவை தொகுதிகளிலிருந்து;

  1. மாநிலங்களவையில் ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான ஈராண்டுமுறைத்தேர்தல் நேர்வில், அத்தகைய இடங்கள் இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளிலிருந்து;

  2. மக்களவை இடைத்தேர்தலில் இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான ஒரே நேரத்தில் நடத்தப்படும் பொழுது, அத்தகைய மக்களவை தொகுதிகள் இரண்டுக்கு மேற்பட்டுதாக்கல்செய்திட:

  1. சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு அல்லது மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடத்தப்படும் பொழுது, அத்தகைய சட்டமன்ற தொகுதிகள் இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளிலிருந்து;

  1. மாநிலங்களவையில் ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான இடத்தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பொழுது, அத்தகைய இடங்கள் இரண்டுக்கு மேற்பட்டு தாக்கல் செய்திட:

  1. சட்டமன்ற மேலவை கொண்ட மாநிலத்தில், இரண்டு அல்லது மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பொழுது, அத்தகைய சட்டமன்ற தொகுதிகள் இரண்டுக்கு மேற்பட்டு தாக்கல் செய்திட:

விளக்கம்: இந்த உட்பிரிவுன் நோக்கங்களுக்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடைத்தேர்தல்கள் பிரிவுகள் பிரிவுகள் 147, 149, 150 அல்லது 151 கீழ் நேர்விற்கேற்ப ஒரே தேதியில் அத்தகைய தேர்தல்கள் நடத்தப்பட தேர்தல்கள் ஆணயத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கும் போது, ஒரே நேரத்தில் நடத்தப்படுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பிரிவு 33A. தகவலுக்கான உரிமை(Right to information)

  1. வேட்பாளர் ஒருவர், இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது அதன் கீழான விதிகளின் கீழ் அளிக்கப்பட வேண்டிய தகவல்களுடன் பிரிவு 33 உட்பிரிவு (1)இன் கீழ் கொடுக்கப்படும் வேட்பு மனுவுடன் .

  2. நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றில் தகுதிறம் வாய்ந்த நீதிமன்றத்தால் குற்றச் சார்த்து வனையப்பட்டு அதில் 2 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதித்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றத்திற்கு அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாரா எனும் தகவலையும்

  3. பிரிவு 8 உட்பிரிவு (1) அல்லது (2) அல்லது (3) இல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் குற்றத்திற்கு, குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டு மற்றும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்டு சிறை தண்டணை விதித்து தண்டிக்கப்பட்டுள்ளாரா எனும் தகவலையும் அளித்தல் வேண்டும்

  4. வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிபவர் நேர்விற்கேற்ப, பிரிவு 33 உட்பிரிவு (1) இன் கீழ் வேட்பு மனு தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் அளித்திடும் நேரத்தில், உட்பிரிவு (1) இல் குறித்துரைக்கப்பட்ட தகவல்களை சரிபார்த்து வகுத்தமைக்கப்பட்ட படிவத்தில் வேட்பாளரால் ஓர் பிரமாணப்பத்திரத்தையும் (Affidavit) சேர்த்து அளித்தல் வேண்டும்

  5. தேர்தல் பொறுப்பு அலுவலர் உட்பிரிவு (1)இன் கீழ் அவரிடம் தகவல்கள் அளிக்கப்பெற்றவுடன், உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஆவணத்தின் நகலை, தொகுதியின் வாக்காளர்கள் வேட்பு மனு பற்றி அறிந்து கொள்ள, அவரது அலுவலகத்தில் பார்வையில் படும்படியான ஓர் இடத்தில் ஒட்டி வைத்தல் வேண்டும்.

பிரிவு 33B. இந்தச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் மட்டுமே வேட்பாளர் தகவல்கள் அளித்தல் வேண்டும்(Candidate to furnish information only under Act and the rules)

நீதிமன்றத்தின் ஏதேனும் தீர்ப்பு, தீர்ப்புரை அல்லது தேர்தல் ஆணையத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது நெறியுறுத்தல் அல்லது ஏதேனும் அறிவுறுத்தல்களில் அடங்கியுள்ளது எது எவ்வாறாக இருப்பினும், எந்தவொரு வேட்பாளரும், இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது இதன் கீழான விதிகளின் கீழ் வெளியிடப்பட அல்லது அளிக்கப்பட வேண்டியதல்லாத அத்தகைய தகவல்கள் எதனையும் வெளியிட அல்லது அளித்திட வேண்டியதில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவுடன் இணைக்க வேண்டியவை


1. பிரமாணப்பத்திரம் (Affidavit )

2. உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி இல்லை என்பதற்க்கான நிலுவையின்மை சான்றிதழ்
3. வாக்காளர் அடையாளர் அட்டை ஜெராக்ஸ் (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர்)
4. ஆதார் அட்டை 
5. வாக்காளர் பட்டியல் (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர் பெயர் உள்ள பக்கம்)
6. சாதி சான்றிதழ் (ரிசர்வ் தொகுதிக்கு மட்டும்)
7. பொது விபரம் படிவம் 
8. கட்சி சின்னம் எனில் படிவம் ஏ.பி.சி.,
மற்றும் உங்கள் தேர்தல் அலுவலர் கோறும் விபரங்கள்

வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பு மனுவுடன் இணைத்து பிரமாணப்பத்திரத்தையும் (Affidavit தாக்கல் செய்ய வேண்டும் .மாதிரி அபிடவிட் தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் (மாதிரியை வழக்கறிஞர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்) 

 

பிரமாணப்பத்திரம் (Affidavit )

பிரமாணப்பத்திரத்தை பூர்த்தி செய்யும் போது கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதில்;

  • சொத்து மதிப்பு விபரம்
  • கடன் பற்றிய விபரம்
  • வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம் 
  • (வேட்பாளர் மற்றும் அவரின் வாழ்க்கை துணை குடும்ப உறுபினர்களின் சொத்து மதிப்பு விபரம் கடன் பற்றிய விபரம்
  • வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம்)
  • வழக்கு விபரம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் 
    (தோரயமாக சொத்து கடன் பற்றி சொன்னால் போதும் வருமான வரி விபரங்கள் இருந்தால் இருப்பதை மட்டும் தெரிவித்தால் போதும்)

  • கட்டாயம் அனைத்துக் இடங்களும் பூர்த்தி செய்ய வேண்டும் காலியாவோ அல்லது ---- ஆகவோ விடக் கூடாது ஆம் இல்லை என்று முழுமையாக எழுத வேண்டும்

  • அனைத்து பக்கங்களிலும் கட்டாயம் கையொப்பம் செய்ய வேண்டும்

  • நோட்டரி வழக்கறிஞர் சான்று கட்டாயம் பெற வேண்டும் 

  • வேட்பாளர் முன்மொழிபவர் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை நகல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய சில அலுவலர்கள் கேட்பார்கள்

  • போட்டியிடும் பதவி SC/ ST இடஒதுக்கீட்டில் வந்தால் மட்டும் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். பொது போட்டி பதவிக்கு சாதி சான்று தேவையில்லை

  • உள்ளாட்சியில் நிலுவை இல்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் வீட்டு வரி குடி நீர் வரி உள்ளிட்ட உள்ளாட்சிக்கு கட்ட வேண்டிய நிலுவை தொகை பாக்கி இல்லை என்று சான்று அவசியம் தேவை மற்ற பாக்கிகள் பற்றி வேட்பாளர்கள் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. அதே போல முன்மொழிபவர்களுக்கும் நிலுவையின்மை சான்றிதழ் சில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்கின்றார்கள்

  • நிலுவையின்மை சான்றிதழ் வேட்பாளர் வசிக்கும் உள்ளாட்சியில் பெற வேண்டும் 
    கிராம ஊராட்சி எனில் ஊராட்சி செயலாளரிடம் /மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி எனில் அதன் அலுவலகத்தில் ரூ 20 விண்ணப்பகட்டணம் செலுத்தி ரூ 3 கோர்ட்டு ஸ்டாம்ப் ஒட்டி விண்ணப்பம் செய்தால் உடனடியாக நிலுவையின்மை சான்று வழங்குவார்கள்

  • வேட்பாளர் அவரின் குடும்பத்தினருக்கு வருமான வரி நிரந்திர கணக்கு எண் இருந்தால் அதன் விபரமும் கடைசியாக வருமான வரி கட்டிய விபரமும் அபிடவிட்டில் குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் இல்லை என்று குறிப்பிட்டால் போதும் கடைசியாக வருமான வரி கட்டிய போது அதில் காட்டியுள்ள மொத்த வருமான விபரம் சொன்னால் போதும் தேர்தலுக்காக வருமான வரியை கட்டி அந்த ஆதாரம் எல்லாம் கொடுக்க தேவையில்லை

  • வேட்பாளர் மீது வழக்குகள் இருந்தால் மட்டும் அதன் விபரம் கவனமாக வழங்க வேண்டும் 
    சிவில் வழக்கு தீர்ப்பில் குற்றசாட்டில் இருந்து விடுதலையான வழக்கு விபரம் சொல்ல தேவையில்லை 
    ஈராண்டுகள் அதற்கும் மேல் தண்டனை தர கூடிய வழக்கு வேட்பாளருக்கு எதிராக பதிய பட்டு நிலுவையில் இருந்தாம் தண்டனை வழங்கப்பட்டு மேல் முறையீடு நிலுவையில் இருந்தால் மட்டும் அதன் விபரம் கட்டாயம் வழங்க வேண்டும்

  • வேட்பாளர் அவரின் குடும்பத்தினரின் அசையும் அசையா சொத்து விபரம் குறிப்பிட வேண்டும்

  • கையிருப்பு ரொக்கம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் பற்றிய விபரம் தோராயமாக குறிப்பிடலாம்

  • அசையா சொத்து பற்றிய விபரம் சரியாக தெளிவாக குறிப்பிட வேண்டும் .குடும்ப சொத்து தனி சொத்து வீடு நிலம் பிளாட் ஆகியவறின் சர்வே எண் சந்தை மதிப்பு வாங்கிய மதிப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும்

  • கல்வி தகுதி பற்றிய விபரம் படித்த படிப்பு வருடம் கல்வி நிறுவனம் ஆகிய விபரம் அளித்தால் போதும் ஆதாரம் இணைக்க தேவையில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com