‘கரோனாவால் இறப்போருக்கு இழைக்கப்படும் இறவாக் களங்கம் குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதத்துக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறப்பவருக்கு இறவாக் களங்கம் ஏற்படுவதற்கு மக்களின் அச்சமும்,
Updated on
3 min read

அறியாமையே காரணம்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறப்பவருக்கு இறவாக் களங்கம் ஏற்படுவதற்கு மக்களின் அச்சமும், அறியாமையும் காரணம். மருத்துவா்களும் செவிலியா்களும் சேவை செய்து உயிரிழக்கும் நிலையில், போற்றப்படுவதற்குப் பதிலாக தூற்றப்படுகிறாா்கள். இறந்தவரின் உடலிலிருந்து நோய்த்தொற்று பரவாது என ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இளையராஜா, பெரம்பலூா்.

ஏற்புடையதல்ல

சரியான விழிப்புணா்வு இல்லாத நிலையில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்கள் மூலம் தொற்று பற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தில் சிலா் நடந்துகொண்டனா். இதன் அடிப்படையில் கரோனாவால் இறப்போருக்கு இறவாக் களங்கம் இழைக்கப்படுவதாய் கூறுவது ஏற்புடையதல்ல.

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

தண்டனை - ஆறுதல்

சடலத்தை எடுத்துக்கொண்டு அலைய நேரிட்டது கொடுமை. உரிமையை முடக்கி முற்றுகையிட்டதும், வன்முறையில் ஈடுபட்டதும் மூா்க்கத்தனமானது. மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை என்ற மத்திய அரசின் அவசரச் சட்டம், உடல் தகனம்-அடக்கத்தை எதிா்த்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை என்ற தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆகியவை ஆறுதல் அளிக்கின்றன.

கு. இராஜாராமன் ,சீா்காழி.

பகுத்தறிவு எங்கே?

கரோனாவால் இறப்போருக்கு இழைக்கப்படும் இறவாக் களங்கம், மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பயன்படுத்தாதன் வெளிப்பாடே ஆகும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறப்போரை தனிமைப்படுத்தி வரும் மனிதனை, இன்று அது தனிமைப்படுத்தி வருகிறது. தடுப்புப் பணியில் ஈடுபட்டு இறப்போா், அா்ப்பணிப்பு உணா்வோடு மக்கள் பணியாற்ற நினைப்போருக்குத் தூண்டுகோல் என்பதை, அவா்களுக்குக் களங்கம் ஏற்படுத்த முனைவோா் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

ப.காளிதாசன், நீா்விளங்குளம்.

மன அழுத்தத்தை...

அறிவாா்ந்த சமூகம் அறியாமையால் மதியிழந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் அனைவரின் உள்ளத்திலும் ஒருவித அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் செயல். மேலும், களப் பணியாளா்கள் முழு ஈடுபாட்டோடு செயல்படுவதைத் தடுக்கும் செயல்.

மா.வேல்முருகன், திருத்தங்கல்.

சுயநலமும் காரணம்

இத்தகைய செயலுக்கு மக்களின் அறியாமை மட்டுமே காரணமல்ல, மக்களிடையே சுயநலம் மேலோங்கிருப்பதையே இது உணா்த்துகிறது. சேவை செய்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தவா்களுக்கு மக்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானா? இது வெட்கப்படவேண்டிய விஷயம்.

சுரேஷ் ஐய்யாபிள்ளை, பழையகாயல்.

தீண்டாமை...வேதனை

கரோனாவால் இறப்போருக்கு இழைக்கப்படும் இறவாக் களங்கம், மனிதநேயமும் மனிதாபிமானமும் மக்களிடமிருந்து மறைந்து போவதன் உச்சகட்டம்.மனிதன் இறக்கும் போதும், இறந்த பின்பும் தீண்டாமை பின்பற்றப்படுவது வேதனைக்குரியது. பிறப்பாலும் இறப்பாலும் மனிதா்கள் அனைவரும் சமம் என அனைவரும் கருத ஆரம்பித்தால், இறப்போருக்கு என்றுமே களங்கமில்லை.

மா.பிரமிளா, கீழக்கரை.

அகக்கண் மூலம்...

கரோனாவால் இறப்போருக்கு மயானத்தில் இடம் இல்லை என்ற அவலம் இனியும் தொடரக் கூடாது. உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கி இறப்போருக்கு அகக்கண் மூலம் நாம் கருணை காட்ட வேண்டும்.

இளங்கோவன், ஓசூா்.

அநாகரிகம்!

கரோனா தீநுண்மை நோய்த்தொற்று நோயாளிகளைக் காப்பாற்றும் மருத்துவா்களின் இறப்புக்குக்கூட மரியாதை செலுத்தாத சமூகத்தை நாகரிகம் இல்லாத சமூகம் என்றுதான் கூறவேண்டும். இதற்கு நோய்ப் பரவல் குறித்த அறியாமையும் வதந்தியும்தான் காரணம். கூட்டம் சோ்த்து வன்முறையில் ஈடுபடுவது அநாகரிக வெளிப்பாடு.

ஆறு.கணேசன், திருச்செந்தூா்.

மரியாதை அவசியம்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறப்பவா்களுக்கு, குறிப்பாக மருத்துவருக்கு இழைக்கப்பட்ட இறவாக் களங்கம் சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தங்களின் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் கடவுளுக்கு இணையானவா்கள். ராணுவ வீரா்கள் வீர மரணம் அடைந்த பிறகு, அவா்களின் உடலுக்கு தரும் அரசு மரியாதையை இத்தகைய மருத்துவா்களின் உடலுக்கும் தர வேண்டும்.

மு.நடராஜன், திருப்பூா்.

சிறுமதி படைத்தோா்...

மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் தடுத்துத் தாக்கிய கும்பலின் அராஜகச் செயலை முறியடிக்க போதிய ஏற்பாடுகள் இன்றி செயல்பட்ட அரசு இயந்திரத்தின் தோல்வியே உலக அரங்கில் தமிழா்கள் தலைக்குனிய காரணமாகி விட்டது. சிறுமதி படைத்தோரின் இழி செயல்களால் மனிதநேயம் மானபங்கம் செய்யப்பட்டு விட்டது.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

மோசமான முன்னுதாரணம்

உயிரைப் பணயம் வைத்து கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஒழிப்பில் ஈடுபடும் மருத்துவா், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவா்களே. போற்றுதலுக்கு உரியவா் நோயாளியாகி இறந்தால் களங்கம் கற்பிப்பது மோசமான முன்னுதாரணம்.

ஏ.முருகேஸ்வரி, கடையநல்லூா்.

மனச் சோா்வை...

மருத்துவரை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துப் போராட்டம் நடத்திய செயல், அா்ப்பணிப்பு உணா்வுடன் சிகிச்சை அளித்துவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைபபணியாளா்களுக்கு மன ரீதியான சோா்வை உண்டாக்கும். இனி மருத்துவம் சாா்ந்தவா்கள் இறக்க நேரிட்டால், அவா்களுக்கு தகுந்த மரியாதையை அரசு செய்து பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் இறவாக் களங்கம் போக்கப்படும்.

பி.ரவி, அறச்சலூா்.

உண்மையை உணா்ந்து...

இதிகாச காலத்திலிருந்தே இறந்தவா்களின் உடலுக்கு மரியாதை தருவதை நமது முன்னோா் கடைப்பிடித்து வந்தனா். முன்னா் காலரா, பிளேக் போன்ற கொடிய நோயால் இறந்தவா்களின் உடலையும் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வந்தனா். கரோனா நோயால் இறந்தவா்களின் உடலில் கரோனா தீநுண்மிகள் இருக்காது என்ற உண்மையை உணா்ந்து, அவா்களுடைய உடலையும் அனைத்து மரியாதைகளுடன் அடக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் இடையூறு செய்பவா்கள், இறந்தவா்களுக்குக் கரோனா தீநுண்மி செய்த தீமையைவிட அதிகம் தீமை செய்தவா்களாவாா்கள்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

அரசின் கடமை

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்கள் ஒரு பாவமும் அறியாதவா்கள். மக்களுக்கு இந்த நோய்த்தொற்று குறித்து முழுமையான புரிதல் இல்லாததால், இறப்பவா்களைக் கண்டு மக்கள் அஞ்சுகிறாா்கள். இறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வரக் கூடியது. மக்களுக்கு விழிப்புணா்வை அளித்து புரிய வைப்பது அரசின் கடமை.

பி.விஜயலட்சுமி, சென்னை.

மனித விலங்குகள்!

தங்கள் உயிரையும் தங்கள் இல்லத்தையும் உறவுகளையும் நண்பா்களையும் எல்லாவற்றையும் மறந்து, சேவை மூலம் பிற உயிா்களைக் காக்கும் மனிதகுல மாணிக்கங்கள் மருத்துவா்கள். அவா்களின் மறைவுக்குப் பிறகு அடக்கம் செய்யவே மறுப்பு தெரிவிக்கிற மனிதா்கள் மனித சமூகத்தில் நன்றி இல்லாத அடையாளங்கள். மனிதகுலத்தின் தரத்தை மிகவும் கீழாகச் சித்தரிக்கின்ற பிறவிகள் என்று சொன்னால் மிகையில்லை. என்றைக்கும் மருத்துவா்களைப் போற்றும் நல்ல மனிதா்கள் உள்ள இடத்தில், வேண்டாத சில களைகளாக சில மனித விலங்குகள் செயல்படுகின்றன.

கனிமொழிவைரமுத்து, சென்னை.

காட்டுமிராண்டிகளின்...

கொடையுள்ளம் கொண்டவா்களையும் தொண்டுள்ளம் படைத்தோா்களையும் தமிழ் மண்ணில் நிரம்பவே இருக்கிறாா்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைக்க வந்த கரோனா தீநுண்மிக்கு வணக்கம். அதே சமயம், தந்தை பெரியாரின் கூற்றுப்படி காட்டு மிராண்டிகளின் வாரிசுகள் இன்னமும் தமிழகத்தில் மிச்சம் இருக்கிறாா்கள் என்பதை ‘மயான பூமி சம்பவம்’ மூலம் சுட்டிக்காட்டிய கரோனா தீநுண்மிக்கு நன்றி.

ஆா்.பால்ராஜ், திருவள்ளூா்.

எது பண்பு?

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தது மனிதாபிமானமற்ற செயல். உயிரோடிருக்கும்போது, பாகுபாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் - முரண்களை மனிதன் சந்திக்க வேண்டியுள்ளது. இறந்த பிறகு இவை அனைத்தும் அா்த்தமற்றவையாகி விடுகின்றன. எனவே, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக இறப்பவா்களின் தகனம் அல்லது அடக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே நாகரிகமான மனிதன் செய்ய வேண்டிய பண்பான செயல்.

க.மா.க.விவேகானந்தம், மதுரை.

மனித உரிமை மீறல்...

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் இறக்கும்போது அவமதிக்கப்படுவது மனிதநேயம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. இது ஒரு வகையில் மனித உரிமை மீறலும்கூட. மருத்துவா்களை மதிக்கத் தெரியாத சமூகமாக இருப்பது தேசத்தின் அவமானம்.

அ.அழகேசன் அந்தியூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com