அச்சுறுத்திய கள்ளிப்பாலும் நெல்மணிகளும் இன்று
மண் பார்த்து வெட்கி தலை கவிழ,
பெண்மை போற்றும் தமிழ் மண்ணில்
பெருமையுடன் பெண்ணென்று சொல்வேன் !
அடுப்படியே வாழ்வின் எல்லையென்ற பெண்களுக்குள்
வீரமங்கை வேலுநாச்சியாரும் , ராணி இலக்குமிபாயும்
இந்நாளில் மறுபிறவியாய் உரு கொள்ள
இன்று எல்லையில் காவல் வீராங்கனைகளாய் !
விவசாயம் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் திறன் காட்ட,
பெண்ணுரிமைக்காக திடத்துடன் குரல் கொடுக்க,
பெண்களை வழி நடத்தியதே பெண்கல்வி !
அழகு வர்ணனைகளில் மனம் மயங்காது
விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டு
தன்னையே செதுக்கும் பெண் சிற்பிகளை
பெருமிதத்துடன் பெண்ணென்று சொல்வோம் !
- தனலட்சுமி பரமசிவம்
**
பெண்ணென்றே ஐந்திணையைச் செப்பி வைப்பேன்;
பெண்ணின்றி மாந்தவுயிர் பிறப்பெ டுக்க
மண்ணுலகில் வழியுமில்லை; நாளு மிங்கே
மயிரளவும் வினையெதுவும் விளைவ தில்லை;
கண்ணின்றி காட்சியுண்டு; ஆனா லெங்கும்
பெண்ணின்றி வாழ்வியலும் வாய்ப்ப தில்லை;
மண்ணின்றி எவ்வுயிரும் வாழு மென்றால்
பெண்ணென்றே பெரிதுவக்கச் சொல்வேன் போற்றி!
இயற்கையுந்தான் பெண்ணென்றே புகழ்ந்து ரைப்பேன்;
இடிமின்னல் மழையுமென்றால் பெண்ணே என்பேன்;
இயல்பாக பேரறிவும் வலிமை ஆற்றல்
இணைந்திருக்கும் பெண்ணென்றே பெருமைக் கொள்வேன்;
இயங்குகிற பேரருவி பெண்ணே என்று
இதயஞ்சூழ் உண்மையாலே உரக்கச் சொல்வேன்;
இயற்கையைப்போல் இவ்வுலகில் மட்டு மல்ல,
எவ்வுலகும் பெண்ணாலே என்பேன் போற்றி!
- கவிக்கடல், கவிதைக்கோமான், பெங்களூரு.
**
கோழைகள் பேடிகள்,
மானமிலாது பிழைக்கினும்
உயிர்வாழ்வு பெரிதென
யாவும் துறந்து ,மாண்பை மறந்து
கண்ணீர் விட்ட கதையையே
கண்டது தூக்குக் கயிறு ;
சுதந்திரம் பெரிதென முத்தமிட்டுத்
தானே மாட்டித் தூக்கடா
என்று கண்ணைக்காட்டிய
வீர பாண்டியக் கட்டபொம்மனின்
முதல் முத்தம் பெற்று இளகியது
- -கவிஞர் வையவன்
**
அவளின் மேனி என்னோடு இல்லை
அதனால் எனக்கொரு
கவலை இல்லை; அவளின் மனதோ என்னோடு இருக்கிறது
அதனால் எனக்கொரு துக்கம் இல்லை
சுத்தமான பெண்ணென்று
சொல்வேன்; எனது ஆண்மையின் மீது அவளுக்கு மோகமில்லை;
எனது அந்தஸ்தின் மீது அவளுக்கிம்மி ஆசையில்லை; ஏழ்மை
மீது அவளுக்கொரு அவமானமில்லை எனில் பெண்ணென்று
சொல்வேன்; எனது தாழ்மையின் மீது அவளுக்கு அறுவறுப்
பில்லை எனது உள்ளத்தின் மீதவளின் விருப்பம் கொள்ளை
அதனால் மறக்கமுடியவில்லை அவளே
பெண்ணென்று சொல்வேன்
இதில் வேஷமோ தோஷமோ யில்லை
அவள் என்னிடமோ
நான் அவளிடமோ காதலை வினவவே யில்லை; இறைவன்
சேர்ப்பானோ மாட்டானோ தெரியாது
ஆனாலும் பெண்ணென்று
சொல்வேன்; சேரும் நாள் வரும்வரை பிரிவு வராது இருக்கட்டுமே
பாறைக்குள்ளும் தேரை நட்பின்றி ஒட்டு
உறவின்றி தனிமையில்
உயிர் வாழ்ந்து கொண்டுள்ளது போல் இருவருமே வாழ்ந்து
கொண்டு இருப்பதாலப்பூவை உரிமை பெண்ணென்று சொல்வேன்
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்
**
மின்னல்பூ பூக்கின்ற பெண்ணே இந்த
மண்ணுலகை ஆளுகின்ற திறனைக் கொள்வாள்;
பின்னலேதான் பூவாகப் பூக்க வைக்கும்
பெண்ணேதான் புவிப்புரட்டும் நெம்பு கோலே!
கன்னப்பூ முத்தத்தில் மயங்கி டாமல்
கண்ணகியாய்க் கொதிப்பவளே நாட்டின் தூண்கள்!
புன்னகைப்பூ மணத்தினிலே வையம் ஆளும்
பெண்ணென்றே பெருமையுடன் சொல்வேன் நானே!
செந்நெல்லும் தலையசைத்து சிரிக்கு மென்றால்
தையலவள் பேருழைப்பின் பயனே யாகும்;
செந்நெருப்பில் புடம்போட்ட பொன்னென் றாலோ
சீர்மைமிகு பெண்ணென்றே சொல்வேன் நானே!
வெந்தாலும் சங்கெனவே வெண்மை கொண்ட
வஞ்சியரே பாரினையும் இயக்கும் தெய்வம்;
செந்தனலில் புழுவாகத் துடித்த போதும்
சொல்லிடுவேன் பெண்ணின்றி வைய மில்லை!
- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
**
என்மீது விருப்பம் இருந்தால் மட்டும்
என்னை தேடி வரலாம்; அவளையே நல்ல பெண்ணென்று சொல்வேன்
அருகில் வரலாம் என்னில் ஐக்கிய மாகியும் விடலாம்;
மோகினியல்லா தவளை பெண்ணென்று சொல்வேன்
நாம் வகுத்த பாதையில்லை பரமனால்
வகுத்த பாதையென; நினைப்பவளை
அதிசய பெண்ணென்று சொல்வேன்
வேண்டி வருவதை தூண்டி வருவதை வேலித்தாண்டி வருவதை;
விரும்பா தாளை பெண்ணென்று சொல்வேன்
தோண்டி விசாரிக்க விரும்பவில்லை
இதயம் காத்துக் கிடக்கிறது; வரவுக்கு
அவள் வந்து விட்டாள் என் உறவுக்கந்த
பூவையை பெண்ணென்று சொல்வேன்
- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை
**
பெண்ணென்று சொல் வேன்
பெருமை மிகக் கொள்வேன்
கண்ணென்று சொல்வேன்
கல்வியோடு வா என்பேன்
அடுப்படியில் சமையலறை
மட்டும் அகிலத்தை ஆள உதவாது
ஒழுக்கம் நிறைந்த கல்வி
பெண்ணை உயர்த்தி வாழ
வைக்கும் என்றே முழங்கிடு
கலாசார மாறுபாடுகள்
குடும்பத்தில் மாற்றம்
தந்திடாமல் ஒருவனுக்கு
ஒருத்தியாக பாரதிதாசனின்
குடும்பவிளக்காக வாழ்ந்துவிடு
- லட்சுமி
**
தாய்மையின் சிறப்பை
பெண்ணென்று சொல்வேன்!
"தாய்க்கு பின் தாரம்" என்ற அவதாரமானவளை
பெண்ணென்று சொல்வேன்!
ஒரு ஆணின் வெற்றிக்கு
பின்னேயும்!
முன்னேயும்!
இருப்பவளை! பெண்ணென்று சொல்வேன்!
ஒரு குடும்பம் சிறக்க!
குதூகலம் பிறக்க!
வேண்டும் ஒன்றை! பெண்ணென்று சொல்வேன்!
அப்பா! அம்மா!
மனம் தளரும் போது!
நான் இருக்கிறேன் என்று பிறந்த வீட்டில்!சிறுவயதில்
சொன்னதையே!
புகுந்த வீட்டிலும்
கடைப்பிடிக்கும் மகள்களை!
( மருமகள்களை)
தலைசிறந்த பெண்ணென்று சொல்வேன்!
செலவைச்சுருக்கி!
வரவைப்பெருக்கி!
வேண்டியதை மட்டுமே
புகுத்தி வாழும்!
புத்திசாலியான
ஒருத்தியை! பெண்ணென்று சொல்வேன்!
யாராக இருந்தாலும் வேறாக பார்க்காமல்!
உறவுகளை மேம்படுத்த!
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி!
உள்ளங்களை கொள்ளை கொள்ளும்
ஒருத்தியை!
பெண்ணென்று சொல்வேன்!
தாயாக! தாரமாக!
பாட்டியாக!சித்தியாக!
பெரியம்மாவாக!
இப்படி பெயர் சூட்டி!அழைத்திட்ட போதும்!
நற்குணங்கள் யாவையும்!
கைவிடாத ஒருத்தியை
மிகச்சிறந்த பெண்ணென்று சொல்வேன்!
பிறந்த வீட்டில் வறுமை!
புகுந்த வீட்டில் வளமை!
தம்பி தங்கைகள் படிக்க
பணம் ஒரு தடை!
அச்சமயம் புகுந்த வீட்டில் கேட்டு!
பிறந்த வீட்டிற்கு உதவும்
குணமுள்ள ஒருத்தியை!
பெண்ணென்று சொல்வேன்!
மாமனார் மாமியார்
வயதாகி தளரும் போது!
தன் தாயாக தந்தையாக
கண்துஞ்சாமல் கவனிக்கின்ற ஒருத்தியை! அற்புத
பெண்ணென்று சொல்வேன்!
எள்ளளவும் ஐயமில்லை பெண்கள் வீட்டின் கண்கள்!
ஒலியையும் ஒளியையும் காத்து! வலியையும்!
அதனை நீக்கிடும்
வழியையும் தெரிந்து!
யாவரையும் புரிந்து! அனுசரித்து வாழும்!
பெண்களையும்!
நல்ல பெண்ணென்று சொல்வேன்!
- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.
**