
சமயக் குரவர் நால்வர் வரலாறு-கா.சுப்பிரமணியம் பிள்ளை; பக்.558; ரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108, )044-25267543.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழுணர்வும், சைவ உணர்வும், இலக்கிய உணர்வும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தவர் புலவர் கா.சு.பிள்ளை. தமிழ்-ஆங்கிலம் மற்றும் சட்டநூற் புலமையும் வாய்க்கப்பெற்ற சிறந்த ஆராய்வாளர். பெüத்தம், சமணம் ஆகிய புறச்சமயங்களை வேரொடு களைந்து, சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்த பெருமை சைவ சமயக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகிய நால்வர் பெருமக்களையே சாரும். இந்நால்வரது வரலாறு மிக நுட்பமானவை மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பக்தி நிலை, பழக்க வழக்கங்கள், தமிழர்தம் வரலாறு முதலியவற்றைக் கூறும் காலப்பெட்டகமாவும் திகழ்கிறது. வரலாற்றுக்கு இடையிடையே கூறப்படும் தேவார, திருவாசக, திருக்கோவையார் ஆராய்ச்சிக் குறிப்புகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. "அன்பு வைக்கப்பட்டவர்களுக்குத் துன்பம் நேரிடுவதாய் இருந்தால் அன்பு வைப்பாற்கு அத்துன்பம் நேரிடக்கூடாதென்ற கவலையும் அச்சமும் விளைதல் இயல்பு. தீய ஒழுக்கத்தைக் கண்டபொழுது ஞானிகள் சினங்கொள்ளுதல் இயல்பே' என சம்பந்தர், சமணர் பொருட்டு சினங்கொள்வதை மிக நுட்பமாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, நடுநடுவே பல தத்துவக் கருத்துகள் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நூலகங்களில் பார்வை நூலாக (ரெபரன்ஸ்) இருந்த பொக்கிஷம், தற்போது அனைவரும் படிக்கும்படி புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல, நால்வர் பெருமக்களின் வரலாறு அனைத்தும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது. ஓவியர் ம.செ.யின் அட்டைப்படம் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி படிக்கத் தூண்டுகிறது. சைவ சமய ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, சைவப் பேருலகுக்கே ஒளி தரவல்லது ஞானத்தின் வரலாறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.