இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? - டி.தருமராஜ்; பக்.176; ரூ.180; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044- 4200 9603.
சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை.
இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் விளக்குகின்றன.
இளையராஜா இசை அமைத்த பாடல்களைக் கேட்கும்போது, அப்பாடல் இடம் பெற்ற திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வராமல், பாடல்கள் மட்டுமே கேட்பவரிடம் தனி உலகை உருவாக்குகின்றன; உணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார் நூலாசிரியர்.
மகனை லட்சிய வாழ்க்கைக்குத் தள்ளிவிடும் அம்மாக்கள் தமிழ்த்திரைப்படங்களில் இருந்து காணாமல் போய்விட்டார்கள். அன்புணர்வு நிரம்பிய அம்மாக்கள் தமிழ் சினிமாவில் வந்த நிலையில், இளையராஜா இசை அமைத்த அம்மா சார்ந்த பாடல்கள் இருக்கின்றன என்கிறார் நூலாசிரியர்.
தமிழ்த் திரைப்படங்களில் சாதி பற்றிய சித்திரிப்புகளை விளக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கதாநாயகன் ஒடுக்ககப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் அவரைத் திரைப்படத்தில் எவ்வாறு சித்திரிக்க வேண்டும்- வழக்கமான தமிழ்த் திரைப்படக் கதாநாயகப் பண்புகள் எவ்வாறு அவருக்குப் பொருந்தாமல் போகின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது.
சமகாலப் பிரச்னைகளை மிகவும் ஆழமான தன்மையுடன் திரைப்படம் சார்ந்து ஆராய்ந்து விளக்கும் சிறந்த நூல்.