வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கும் போகிப் பண்டிகை!

போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழாவாகும்.
வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கும் போகிப் பண்டிகை!

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்தராயணம் என்பது பகல் பொழுது. தட்சிணாயணம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும்.

பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள் இன்று. 

போகிப் பண்டிகை

‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாகக் கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம். அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருள்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருள்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும்.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப்போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இந்திர விழா

இந்தப் போகி உருவானதற்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.

ஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாள்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின் மீது 7 நாள்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான். தனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.

ஜோதிடத்தில் போகி

ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்களாகக் கருதப்படுபவர்கள் சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும். பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்குக் காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தமானது. புதிய விடியலான உத்தராயணத்திற்கு முன் தேவையற்ற விஷயங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு.

அதேபோல் "புதிய" என்ற வார்த்தையின் நாயகன் சுக்கிரன். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆகப் போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருள்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினமாகும். 

போக வாழ்வை அருளும் கிரகம் சுக்கிரன். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திராணி எனக் கூறப்படுகிறது. இந்திராணி என்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழாவாகவே கருதப்படுகிறது. 

திருஷ்டி தோஷம்

போகிப் பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டிலிருக்கும் தேவையில்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். 

போகி பண்டிகை தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் வந்தாலும் தெலுங்கு பேசும் மக்களும் இதனைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பூக்கள், அக்ஷதை எனப்படும் மங்கல அரிசி, நாணயங்கள், சிறிய கரும்பு துண்டுகள், கடலை ஆகியவற்றைக் கலந்து ”போகி பள்ளு” எனும் கலவையைப் போகியன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குளிப்பாட்டி புத்தாடை அணியச்செய்து இருக்கைகளில் அமரச்செய்து பெரியவர்கள் அவர்களின்  தலையில் தெளித்து ஆசிர்வதிக்கிறார்கள். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களிலிருந்தும் காக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

தேவையற்றதை தேவைப்படுபவர்களுக்குத் தரலாம்

கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக்கூடிய பழைய பொருள்களைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்துவிடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com