ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணியில் ரஹானே, விஜய், ராயுடு, திவாரி, உத்தப்பா, ஜாதவ், பின்னி, அக்ஷர், ஹர்பஜன், புவனேஷ்வர், குல்கர்ணி ஆகியோர் உள்ளார்கள். உத்தப்பா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
ஆரம்பம் முதல் இந்திய அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாறியது.
தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு நன்றாக ஆடினாலும் அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், அதன்பிறகுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்க ஆரம்பித்தது.
நான்காவதாக களமிறங்கிய திவாரி, 2 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். பிறகு ஜாதவ்வும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களில் என்கிற பரிதாபமான நிலைக்கு வந்தது.
ராயுடு - பின்னி ஜோடி பொறுப்பாக ஆடி, இந்தியாவை சரிவிலிருந்து ஓரளவு மீட்டியது. ராயுடு அபாரமாக ஆடி சதம் அடித்தார். பின்னி அரை சதம் அடித்தார். இந்திய அணி 45 ஓவரின்போது 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. ராயுடு 104, பின்னி 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.