

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்ட வழக்கை விசாரித்த லோதா தலைமையிலான குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. அதோடு சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டு அமைப்புகளில் பங்கேற்கமுடியாதபடி ஆயுள்கால தடைவிதித்தது.
இதுபற்றி இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவிக்கும்போது, ஒன்று அல்லது இரண்டு பேர் செய்யும் செயலின் விளைவுகள் எல்லோரையும் பாதிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை பிரமிடின் அடிப்பகுதியோடு ஒப்பிடலாம். இதுபோன்ற நிகழ்வுகளால் முன்னணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால் அதேவேளையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஐபிஎல்-லால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால் விளையாட்டை விடவும் எதுவும் பெரிதல்ல. லோதா தீர்ப்பை ஆராய பிசிசிஐ குழு ஒன்று அமைத்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும்.
சில எதிர்மறையான விஷயங்கள் நடந்தாலும் ஐபிஎல்-லால் இளம் வீரர்களுக்கு நிறைய நல்லது நடந்துள்ளது. அவர்கள் பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.