மேற்கிந்திய தீவுகளுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணி திங்கள்கிழமை புறப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடு காரணமாக மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு முன்னதாக நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பை விராட் கோலி தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொடருக்கு முன்னதாகவும் இந்திய அணியின் கேப்டன், பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது. பல யோசனைகளுக்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அணி முடிவுகள் மற்றும் இரட்டை கேப்டன் பதவி உள்ளிட்ட சில முடிவுகள் காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்வதை ரோஹித் ஷர்மா நிறுத்தியதில் இருந்து இப்பிரச்னை பெரிதானது. ஆனால், அவ்வாறு கருத்து வேறுபாடு கிடையாது என பிசிசிஐ சிஓஏ தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.