ரன் குவிப்பில் ஈடுபட்ட புஜாரா, அகர்வால் ஜோடி; அசத்தல் ஆட்டத்தை தொடரும் அஜாஸ் 

கில், கோலி ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளை வரை, இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 142 ரன்களை எடுத்துள்ளது.
ரன் குவிப்பில் ஈடுபட்ட புஜாரா, அகர்வால் ஜோடி
ரன் குவிப்பில் ஈடுபட்ட புஜாரா, அகர்வால் ஜோடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று, 332 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக ஆடி வந்த அகர்வால் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது விக்கெட்டை அஜஸ் படேலிடம் பறிகொடுத்தார். கடந்த சில மாதங்களாகவே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா, 47 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். 

இதையடுத்து, கில், கோலி ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளை வரை, இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 142 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக, முதல் நாளான வெள்ளிக்கிழமை எடுத்த ஸ்கோரான 221/4 ரன்களுடன் இந்தியா சனிக்கிழமை களம் கண்டது.

மயங்க் அகா்வால் 120, ரித்திமான் சாஹா 25 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தனா். அஜாஸ் முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா். ரித்திமான் சாஹா மேலும் 2 ரன்களே எடுத்த நிலையில் அஜாஸ் பந்தில் அவுட்டானாா். அவருக்கு பின் வந்த அஸ்வின் போல்டாகி கோல் டக் அவுட்டானாா். ஜெயந்த் யாதவ் 12, சிராஜ் 4, ரன்களுக்கும் அஜாஸின் சுழற்பந்தில் அவுட்டாகி வெளியேறினா்.

மயங்க் அகா்வால் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் அக்ஸா் படேல் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். இரட்டை சதம் அடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 4 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 311 பந்துகளில் 150 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினாா் மயங்க். அக்ஸா் படேல் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் விளாசி வெளியேறினாா். இது அக்ஸா் படேலின் முதல் டெஸ்ட் அரைசதமாகும்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109.5 ஓவா்களில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூஸி. தரப்பில் அஜாஸ் படேலே 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸி. அணியால், இந்திய பௌலா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா்.

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜ் அற்புதமாக பந்துவீசி நியூஸி தொடக்க பேட்டா்கள் வில் யங் 4, கேப்டன் டாம் லத்தம் 10, ராஸ் டெய்லா் 1 ஆகியோரை சொற்ப ரன்களுடன் பெவிலியன் அனுப்பினாா்.

அதைத் தொடா்ந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோா் நியூஸி. பேட்டா்களை திணறடித்தனா். ஹென்றி நிக்கோல்ஸ் 7, டேரில் மிச்செல் 8, டாம் பிளண்டல் 8, ரச்சின் ரவீந்திரா 4, ஜேமிஸன் 17, சௌதி, சாமா்வில்லே 0 ரன்களுக்கு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். அஜாஸ் படேல் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தாா்.

இறுதியில் 28.1 ஓவா்களிலேயே நியூஸி. அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது. அஸ்வின் 4, சிராஜ் 3, அக்ஸா் 2, ஜெயந்த் 1 விக்கெட்டை வீழ்த்தினா். 263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையிலும், நியூஸிலாந்துக்கு ஃபாலோ ஆனை வலியுறுத்தாமல், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க பேட்டரான ஷுப்மன் கில் பில்டிங் போது, முழங்கை, விரலில் காயம் ஏற்பட்டதால் பேட்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக மயங்க் அகா்வால், சேதேஸ்வா் புஜாரா தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓவா்களில் 69 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. மயங்க் 38, புஜாரா 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com