பெண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பெண்கள் விளையாட தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.
பெண்கள் கிரிக்கெட் விளையாடவோ மற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என தலிபான் கலாசார ஆணையத்தின் துணை தலைவர் அகமதுல்லா வாசிக் தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயயான முதல் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
எஸ்பிஎஸ் என்ற ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து வாசிக் பேசுகையில், "பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில், பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது அவசியமற்றது. கிரிக்கெட்டில், அவர்கள் முகத்தையோ உடலையோ மறைக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பெண்களை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்காது. இது ஊடக உலகம். புகைப்படங்கள், விடியோக்கள் வெளியாகி மக்கள் அதை பார்த்துவிடுவர். இஸ்லாமோ, இஸ்லாமிய அமீரகமோ அதை அனுமதிக்காது" என்றார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையாகும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ரத்து செய்தவை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.