ஏழு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வி. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பும் பறிபோய்விட்டது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா.
இலங்கை அணியோ அரைறுதிக்கு நுழைவதற்கான போட்டியில் உள்ளது. 6 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் வென்றால் இலங்கை அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள். டுவைன் பிரிடோரியஸும் டுமினியும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இலங்கை அணியில் சுரங்கா லக்மல் இடம்பெற்றுள்ளார்.
அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. முதல் பந்திலேயே கருணாரத்னே ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அட்டகாசமான கூட்டணி அமைந்தது இலங்கை அணிக்கு. குசால் பெரேராவும் அவிஷ்கா ஃபெர்ணாடோவும் வேகமாக ரன்கள் குவித்தார்கள். பவுண்டரிகள் நிறைய கிடைத்தன. 9 ஓவர்களில் 57 ரன்கள் வந்த நிலையில் அடுத்த ஓவரில் தேவையில்லாத ஷாட்டில் பிரிடாரியஸிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் அவிஷ்கா. அவர் 30 ரன்கள் எடுத்தார். இதுதான் சரிவுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த விக்கெட்டின் மூலம் புத்துணர்ச்சி அடைந்த தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் இலங்கை பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி அளித்தார்கள்.
குசால் பெரேரா 30 ரன்களில் பிரிடாரியஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன்பிறகு ரன்கள் எடுக்கும் வேகம் முற்றிலும் குறைந்தது. 29 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டும் எடுத்த மேத்யூஸ், 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு நிதான ஆட்டக்காரரான குசால் மெண்டிஸ், 51 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டுமினி பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே தனஞ்ஜெயா டி சில்வாவை 24 ரன்களில் வீழ்த்தினார். பொறுப்பற்ற முறையில் இலங்கை பேட்ஸ்மேன்கள் விளையாடியதால் விக்கெட்டுகள் தகுந்த இடைவெளியில் விழுந்துகொண்டிருந்தன.
இலங்கை அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜீவன் மெண்டிஸ் 16, திசாரா பெரேரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.