
ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹாராரேயில் துவங்குகிறது.
இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வேயின் ஒருநாள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரண்டன் டெய்லர், இந்திய தொழிலதிபரிடமிருந்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பெற்றுக் கொண்டதை 2022 ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டார். இதனால், அவருக்கு ஐசிசியின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பவிருக்கிறார்.
வெள்ளைப் பந்து ஃபார்மட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவரான பிரண்டன் டெய்லர், இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 35.55 சராசரியுடன் 6684 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்ச 145 ரன்களுடன் 11 சதங்கள் விளாசியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய அப்போதைய கேப்டனான பிரண்டன் டெய்லர், அந்தப் போட்டியில் 138 விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
ZIM vs SL: Brendan Taylor returns to Zimbabwe ODI squad ahead of Sri Lanka series
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.