

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதாக இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
சொந்த மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக வதந்தி பரவியது.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடவுள்ளதாகக் கூறி, டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளதாக பரவிய வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நிறைவடைந்த பிறகு விராட் கோலியிடம் எதிர்காலத்திலும் ஒரு வடிவிலான போட்டிகளில் (ஒருநாள் போட்டிகளில்) மட்டுமே விளையாடப் போகிறீர்களா எனக் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு விராட் கோலி பதிலளித்ததாவது: ஆமாம். நான் தொடர்ந்து ஒரு வடிவிலான போட்டிகளில் (ஒருநாள் போட்டிகளில்) மட்டுமே விளையாடப் போகிறேன். எதிர்காலத்திலும் இந்த நிலையே தொடரப் போகிறது என பதிலளித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று (நவம்பர் 30) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.