

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடத்தப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியது. அறிமுக சீசனுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடத்தப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்று விளையாடும் வகையில் தொடர் வடிவமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் பலரும் இடம்பெற்று விளையாடவுள்ளனர். மேலும், வெளிநாட்டு வீரர்கள், திறமைவாய்ந்த உள்ளூர் வீரர்களும் இடம்பெற்று விளையாடவுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பயணத்தில் இந்த பிரீமியர் லீக் மிக முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, கிறிஸ் கெயில், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் ஷாகித் அஃப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் பலரும் அந்த தொடரில் இடம்பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.