

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. அணிகள் அனைத்தும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.
தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் இன்று (டிசம்பர் 22) வெளியிடப்பட்டுள்ள விடியோ ரசிகர்களை இவ்வாறு யோசிக்க வைத்துள்ளது. தில்லி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த விடியோவில் நாளை (டிசம்பர் 23) மாலை 6 மணிக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸை தில்லி கேபிடல்ஸின் புதிய கேப்டனாக அறிவிப்பதற்காக இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சிலர், அடுத்த சீசனில் கே.எல்.ராகுல் தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக செயல்படுவார் எனவும் கூறி வருகின்றனர்.
25 வயதாகும் ஜெமிமா ரோட்ரிஸ் இந்திய அணியையோ அல்லது தில்லி கேபிடல்ஸ் அணியையோ கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கிடையாது. இருப்பினும், மெக் லேனிங் தில்லி கேபிடல்ஸிலிருந்து யுபி வாரியர்ஸ் அணியில் இணைந்ததால், அணியின் புதிய கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டி வரை முன்னேற காரணமாக இருந்த அந்த அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட், தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இந்திய வீராங்கனை ஒருவரையே புதிய கேப்டனாக நியமிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த மூன்று சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 27 போட்டிகளில் 507 ரன்கள் எடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்களிப்பை வழங்கியதால், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசனில் ஜனவரி 10 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.