
சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அதே வேட்கையுடன் துபைக்குச் சென்றுள்ளது. மேலும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சதமும், துணை கேப்டன் கில் சதம், 2 அரைசதமும், கோலி, ஸ்ரேயாஸ் என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லப் போகிறது. மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார்.
கடந்த பல மாதங்களாக சரியான ஃபார்மில் இல்லாத கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ரன்களைக் குவிப்பது நல்லதுதான். அவர் அணியில் மிக முக்கியமான நபராக இருப்பார் என்றுதான் தோன்றுகிறது.
பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதலிடத்தைப் பிடிப்பார். மேலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை வெல்லுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவர் ஐபிஎல்லிலும் நன்றாக விளையாடிவருகிறார்” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 481 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.