/

கராச்சி திடல் மேல் பறந்த போர் விமானங்கள்..! பதற்றமடைந்த நியூஸி. வீரர்கள், ரசிகர்கள்!

கராச்சி திடல் மேல் பறந்த போர் விமானங்களால் நியூசிலாந்து வீரர்கள் பதற்றமடைந்தனர்.

News image
Updated On :19 பிப்ரவரி 2025, 5:38 pm IST

பாகிஸ்தானின் கராச்சி திடல் மேல் பறந்த போர் விமானங்களால் நியூசிலாந்து வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பதற்றமடைந்தனர்.

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிவருகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 35 ஓவர்களில் நியூசிலாந்து அணி 175/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் வில் யங் 101, டாம் லாதம் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாத நிலையில், சில முக்கிய வீரர்களும் காயத்தைக் காரணம் காட்டி இந்தத் தொடரில் இருந்து விலகிவிட்டனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போட்டப் பின் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை ஒரு விமான நிகழ்ச்சியை நடத்தியது.

அப்போது பயங்கரச் சத்ததுடன் 7 போர் விமானங்கள் வண்ணப் பொடிகளைத் தூவியவாறு பறந்ததால் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் மற்றும் டெவோன் கான்வே பதற்றமடைந்து மேலே பார்த்து தங்கள் சக வீரர்களுடன் சிரித்துக் கொண்டனர்.

இந்த விமான நிகழ்ச்சி தொடங்கியபோது சில வீரர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் பதற்றமடைந்து தங்களது காதுகளை மூடிக்கொண்டனர். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.