
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது.
பிசிசிஐ கூறுவதென்ன?
பந்தினை தடுக்க முயன்று கை விரலில் காயம் ஏற்பட்டதால், முதல் நாள் ஆட்டத்தின் நடுவே ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துருவ் ஜுரெலே இன்றும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதன் மூலம், ரிஷப் பந்த்துக்கு காயம் இன்னும் சரியாகவில்லை என்பது தெரிகிறது.
இருப்பினும், முதல் இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரிஷப் பந்த்தின் காயம் தொடர்பாக பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது: ரிஷப் பந்த்தின் இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவரை பிசிசிஐ-ன் மருத்துக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் காலையில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட ரிஷப் பந்த் முயற்சித்துள்ளார். ஆனால், அவரால் முழுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே அவர் இன்று கீப்பிங் செய்யவில்லை.
காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யாமலிருக்கும் ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Rishabh Pant did not keep wickets on the second day of the third Test against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.